சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவரும் நிலையில் தற்போது பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளை பல தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர். இது ஒரு வகையில் மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்த போதிலும், துக்கம் நடந்த வீட்டினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. பலரும் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாகின்றனர். சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் இறந்த நிகழ்வில் சில ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் குறித்து திரைப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் தற்போது அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது.

தயாரிப்பாளர் சிங்கத்தின் தலைவராக இருக்கும் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில், மரணம் கொடுமையானது அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது. அப்படி ஒரு நிகழ்வை சந்திக்கும் பொழுது சொந்த பந்தங்களுடன் நட்புகள் கலங்கிப் போகும். செய்வதறியாது திகைத்துப் போகும் அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது. உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்கு தள்ளி விடுகின்றன சமீப கால மீடியாக்களின் செயல்கள். புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது. வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கு வரவிடாமல் செய்து விடுகிறது அல்லது வந்ததும் ஓட வைத்து விடுகிறது.
முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. என் நிகழ்வை படமாக்க வேண்டும், படமாக்க கூடாது என்று. இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்து விட்டது. ஊடகங்கள் மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சி திருடுவதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்து காட்டுகின்றன. இது எந்த விதத்திம் நியாயம் எனத் தெரியவில்லை. சினிமாக்காரர்கள் வீடு என்ன திறந்த மடமா? அவர்களின் துக்கம் கேலிச்சித்திரமா? நேற்றும் இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்களின் போர்வையில் வருபவர்களையும் அடையாளம் கண்டு களைய வேண்டிய நேரம் இது.
குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினர் இதுபோன்ற நாகரிகமற்ற செயல்கள் வேறுபடுத்தி பார்க்க வைக்கின்றன் இவர்களுக்கும் நம் இறப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் மனச்சங்கடத்தை உருவாக்கியுள்ளது. ஊடக தர்மத்தை மீறி நடந்து கொள்வதால் காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும். அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரிகங்கள் தடுக்கப்படும்.
ஒரு மூத்த கலைஞனாகவும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறேன் என்று தயாரிப்பாளர்களையும் சங்க தலைவராக இருக்கும் பாரதிராஜா தற்போது ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். இதனால் இனி பிரபலங்களின் வீட்டில் துக்க நிகழ்வுகள் நடந்தால் அதை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Twitter Original Source From: TFAPA