சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னட மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் காந்தாரா திரைப்படத்தை புகழ்ந்து ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். கன்னட மொழியில் வெளியாகும் திரைப்படங்கள் பெரிய அளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படங்களாக இருப்பதில்லை. கேஜிஎஃப் போன்ற சில படங்கள் அசுர வெற்றியை பெறுகின்றன. அப்படி குறிப்பிட தகுந்த வெற்றியை பெற்றிருக்கும் படமாக இருப்பது தான் காந்தாரா. பழங்குடியின மக்களின் சிறு தெய்வ வழிபாடு பற்றியும், அவர்கள் தங்கள் நிலம் மீது கொண்டுள்ள அக்கறை பற்றியும் மிக அழகாக எடுத்துக் காட்டியிருந்தது இந்த திரைப்படம். இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி அதில் ஹீரோவாக நடித்திருந்தார். கன்னட மொழியில் மட்டுமே வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தமிழ், தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருந்தது.

பதினாறு கோடி பட்ஜெட்டில் மட்டுமே எடுக்கப்பட்ட இந்த படம் கன்னடத்தில் மட்டும் 100 கோடி வசூலை தாண்டி இருந்தது. இது கேஜிஎஃப் 2 படத்தின் வசூலையே முறியடித்து இருக்கிறது. இந்தப் படத்தின் கதை குறித்து சுருக்கமாக பார்த்தோமானால், ஒரு அரசர், பழங்குடியின மக்களுக்கு நிலத்தை தானமாக வழங்குகிறார். அந்த நிலத்தை பின்னாளில் வரும் அரச குடும்பத்தினர் அபகரிக்க நினைக்கின்றனர். அப்போது பூதக்கோலம் ஆடும் ரிஷப் ஷெட்டியின் தந்தை நிலத்தை திருப்பி கேட்டால், ரத்தம் கக்கி சாவார்கள் என்று சாபம் விடுகிறார். அதே போல் நிலத்தை திருப்பி கேட்டவர் ரத்தம் கக்கி இறந்து விடுகிறார். சில காலம் கழித்து, அரசு அந்த நிலத்தை கைப்பற்ற வன அதிகாரிகளை ஏவி விடுகிறது. அப்போது ரிஷப் ஷெட்டி எப்படி அந்த வன அதிகாரிகளிடமிருந்து நிலங்களை மீட்டார் என்பது குறித்த கதை தான் காந்தாரா.
இந்த படம் தமிழிலும் சக்கை போடு போட்டு வருகிறது. பலரும் ஆர்வத்துடன் சென்று இந்த படத்தை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்துவிட்டு ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை போட்டு இருக்கிறார். கற்றது கையளவு கல்லாதது உலகளவு, இந்த காந்தாரா படத்தைப் பார்த்து தனக்கு ரோமங்கள் சிலிர்த்து விட்டது. இந்தப் படத்தின் எழுத்தாளர் இயக்குனர் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், இந்தியாவின் மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த ஒட்டுமொத்த பல குழுவினருக்கு தன்னுடைய மனதார வாழ்த்துக்களையும் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். ரஜினிகாந்தின் இந்த பதிவை பார்த்து நெகிழ்ந்து போன ரிசப் ஷெட்டி அவருக்கு பதில் அளிக்கும் விதமாக ட்விட்டரில் ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார்.
அது இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆகிய நீங்கள் வாழ்த்தியது எனக்கு பெருமையாக இருக்கிறது. சிறுவயதில் இருந்தே உங்களுடைய தீவிர ரசிகன் நான். நீங்கள் வாழ்த்தியது எனது கனவு நினைவானது போல உள்ளது. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். நல்ல படங்களை பார்த்துவிட்டு முதல் ஆளாக அழைத்து வாழ்த்தும் சூப்பர் ஸ்டாரின் குணத்தையும் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.