வெளியீட்டிற்கு முன்னே அனைவரது கவனைத்தையும் பெற்ற படம் “விக்ரம்”. 4 வருடங்களில் அரசியல், நடிப்பு, பிக் பாஸ் என பிசியாக வலம் வந்த கமல் ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகியுள்ளது விக்ரம் திரைப்படம்
தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் ஆரவாரத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் தொழில் செய்யும் விஜய் சேதுபதி, ரகசிய ஏஜென்ட்டாக கமல் ஹாசன், கமல் வளர்ப்பு மகனாக காளிதாஸ், உளவாளியாக பகத் பாசில் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நேர்த்தியாக தந்திருக்கின்றனர். அனிருத்தின் மிரட்டல் இசை, லோகேஷின் கதையமைப்பு, கிரிஷ் கங்காதரினின் கேமரா, சதீஷின் ஆர்ட் ஒர்க், அன்பரீவ் மாஸ்டர்களின் சண்டை காட்சிகள் என அனைத்துமே மிக சிறப்பாக இந்த படத்தில் அமைந்துள்ளது.
கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ரோலில் நடித்து மிரட்டி இருக்கிறார் சூர்யா . படத்தின் இறுதியில் கைதி 2 மற்றும் விக்ரம் 3 ஆகிய படங்களுக்கு லீடு கொடுத்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் லோகேஷ்.
பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் இப்படத்தை வெளியாகி இன்று வரையும் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விக்ரம் படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை பாராட்டி உள்ளார். முதலில் அவரின் நண்பரும் நடிகருமான கமல்ஹாசனை போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி படம் ‘சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்’ என தன் ஸ்டைலில் கூறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கமலும் நன்றி தெரிவித்துள்ளார்.