இந்திய பிரபலங்களை மிரட்டி வரும் ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது டீப் ஃபேக் வீடியோக்கள். குறிப்பாக நடிகைகளை டீப் ஃபேக் என்கிற பெயரில் அவர்களின் வீடியோக்களை போலியான ஆபாச வீடியோக்கள் போல சித்தரித்து இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது தமிழ் பிக் பாஸ் பிரபலம் ஒருவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தமிழ்நாடு காவல்துறைக்கு புகாரும் அளித்துள்ளார். இணையத்தில் விஷமிகள் சிலர் நடிகைகளின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலுடன் இணைத்து வீடியோ எடிட் செய்து அதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதில் ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட் உள்ளிட்டோர் சிக்கி இருந்தனர். இந்ர வீடியோக்கள் வெளியான போது இணையத்தில் பெரும் சர்ச்சையானது. பலரும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்த நிலையில் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதுபோல பொய்யாக எடுத்தது வீடியோ வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரும், அரசும் கடுமையான எச்சரிக்கை விடுத்து வருகின்றது. இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலமாக இருக்கும் சனம் ஷெட்டிக்கும் இது குறித்து மிரட்டல் வந்திருக்கிறது.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் சனம் ஷெட்டி, தனக்கு டீப் ஃபேக் குறித்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்க இருப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் பிளாக்மெயில் செய்யப்பட்ட ஐடியை உடனடியாக காவல்துறை மற்றும் எக்ஸ் தளங்கள் நீக்கி இருக்கிறது. இதற்கு நன்றி தெரிவித்து அவர் தற்போது ட்வீட்டுகளை பகிர்ந்து வருகிறார்.