பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டிருந்த சரவண விக்ரம் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். இதனால் அவர் திரைத்துறையை விட்டு விலக இருக்கிறாரோ? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்கிற சீரியலின் மூலமாக பிரபலமானவர் சரவண விக்ரம். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனவே சீரியல் முடிவதற்கு முன்பாகவே அதை விட்டு விலகி பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இந்த சீசனில் அதிகம் ரசிகர்களால் கேலி செய்யப்பட்ட போட்டியாளராக சரவண விக்ரம் இருந்து வருகிறார்.

குறிப்பாக மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இவரை கரப்பான் பூச்சி என்று விமர்சித்து வந்தனர். மேலும் மாயா உள்ளாடையை எடுத்துக்காட்டி இதை மாஸ்க்காக போட்டுக் கொள்ளும்படி நிக்ஸனை கூறியது தனக்கு தவறாக தெரியவில்லை என்று சொல்லி பரபரப்பை கிளப்பி இருந்தார். எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் இருப்பது, எந்தக் கருத்தும் சொல்லாமல் இருப்பது என்று இருந்ததால் பிக்பாஸ் ரசிகர்களால் மிக்சர் என அழைக்கப்பட்டார். பின்னர் தன்னைத்தானே ‘டைட்டில் வின்னர்’ என்று அழைத்துக் கொண்டதால் வெளியிலும் கடுமையான கேலிக்கு உள்ளாக்கப்பட்டார். இதையெல்லாம் சுட்டிக்காட்டி அவரது தங்கை அவருக்கு அறிவுரை சொல்லி இருந்த போதும், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மீண்டும் மாயாவுடன் இணைந்திருந்தார்.
இதனால் தொடர்ந்து ரசிகர்களால் கேலி செய்யப்பட்டு வரும் சரவணன் விக்ரம், சமூக வலைதளப் பக்கத்தில் எந்த பதிவை பதிவிட்டாலும் ரசிகர்கள் அதற்கு மிக்சர், என்றும் டைட்டில் வின்னர் என்றும் மிகவும் கேலி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அவர், “நான் என்னுடைய பேஷனை விட்டு விலகுகிறேன் (I Quit My Passion)” என்று பதிவிட்டு இருக்கிறார்.மேலும் “உங்கள் அனைவருக்கும் நன்றி” என அவர் பதிவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும், “தயவு செய்து இந்த துறையை விட்டு செல்லுங்கள்” என மீண்டும் அவரை கலாய்த்து வருகின்றனர். இன்னும் சிலரோ, “இது இன்னும் இரண்டு மாதங்கள் தான் பேசப்படும். அதன் பின்னர் அவரவர் தங்கள் வேலையைப் பார்க்க போய்விடுவார்கள், எனவே உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள்” என்று அறிவுரையும் கூறி வருகின்றனர்.