தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பல கோடி ரசிகர்களை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்து வருகிறது. 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்த இந்த நிகழ்ச்சி, தற்போது ஏழாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. இதில் தற்போது 15 போட்டியாளர்கள் போட்டி போட்டு வரும் நிலையில், இந்த சீசனில் பல போட்டியாளர்கள் சுத்தமாக ஆக்டிவாக இல்லாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த சரவணன் விக்ரம், லவ் டுடே படத்தில் நடித்திருந்த அக்ஷயா உதயகுமார், கானா பாலா, ஆர்.ஜே பிராவோ போன்றோர் இந்த வீட்டில் எதற்கு இருக்கிறார்கள் என்று தெரியாமலேயே இருந்து வருகின்றனர்.
இந்த நால்வரில் குறிப்பாக சரவணன் விக்ரம் இணையத்தில் படு வைரலான நபராக இருந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம் கேமரா முன் நின்று “பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் சரவணன் விக்ரம்” என்று அவர் தன்னைத்தானே கூறிக் கொண்டதுதான். அந்த எபிசோடு ஒளிபரப்புக்கு பின்னர் பலரும் சரவணன் விக்ரமை கலாய்க்கத் தொடங்கினர். குறிப்பாக விஜய் டிவியே ப்ரோமக்களில் சரவணன் விக்ரமை கலாய்த்து வந்தனர். பிக் பாஸ்-ம் அடிக்கடி சரவணன் அழைத்து வீட்டு கதவுகளை மூடும்படி கூறுகிறார். இதை பார்த்த கூல் சுரேஷ், “பிக் பாஸ் கூட இவனை எதற்கு பயன்படுத்துகிறார் என்று பாருங்கள்” என்று காமெடியாக கலாய்த்து இருந்தார்.
இப்படியாக தொடர்ந்து வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பல ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகிறார் சரவணன் விக்ரம். மேலும் எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் செய்யவில்லை மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டால் கூட ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதும், அது பற்றி கருத்து கூட சொல்லாமலும் இருந்து வருகிறார். இதனால் அவர் சுவாரசியம் இல்லாத போட்டியாளராக வலம் வருகிறார். மேலும் இந்த வாரம் அவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமது இணையதளம் உட்பட அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்புகளில் கூட அவர் பின்தங்கியே இருக்கிறார். இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கேமிரா முன்பு நின்று சரவணன் விக்ரம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
அதில், “தனக்கு மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது, இந்த முறை ஒரு எவிக்ஷனா? இல்லை டபுள் எவிக்ஷனா? என்பது தெரியவில்லை. சனிக்கிழமை என்ன நடக்கிற போகிறது என்பது தனக்கு தெரியவில்லை. யாரை நம்புவது என்றும் புரியவில்லை, நான் என்ன தவறு செய்தேன்? எதுவுமே செய்யாமல் என்னை ஏன் எல்லோரும் டார்கெட் செய்கிறார்கள், இந்த வீட்டில் எனக்கு நடந்த ஒரு நல்ல விஷயம் எனக்கு இங்கே நிறைய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள்” என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.