இன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை ஒரு பெற்று வரும் ஒரு படமான அயோத்தி படத்தின் திரைவிமர்சனம் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த படத்தில் நடிகர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம் புகழ், போஸ் வெங்கட், ஹிந்தி நடிகர்கள் யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் குறித்து பொதுமக்கள் விமர்சனம் கூறிய போது பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கி விட்டதாகவும் படம் மிக நன்றாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த படம் எப்படி இருக்கிறது? என்பது குறித்த முழு விமர்சனத்தை தற்போது இந்த பதிவில் பார்க்கலாம். அயோத்தியில் தீவிர ஹிந்து குடும்பமாக இருப்பவர் யஷ்பால் சர்மா. இவர் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர். தனது மனைவி, மகள், மகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்வதற்காக வருகிறார். மொழி தெரியாத அந்த ஊரில் அவரது குடும்பம் பயணித்த கார் விபத்தில் சிக்குகிறது.

விபத்தில் யஷ்பால் சர்மாவின் மனைவி இறந்து விடுகிறார். யஷ்பால் ஷர்மாவின் பொறுப்பில்லாத தனத்தால் தான் இந்த விபத்து ஏற்படுகிறது. இறந்த மனைவியின் உடலை வைத்துக் கொண்டு மொழி தெரியாத இடத்தில் திக்கற்று நின்று கொண்டிருக்கிறார். இறந்தவரின் உடலை எப்படி திருப்பி கொண்டு செல்வது என்று தெரியாமல் யஷ்பால் சர்மாவின் குடும்பம் முழித்துக் கொண்டு நடுரோட்டில் திக்கற்று நின்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவ முன் வருகிறார் சசிகுமார். தனது நண்பர்கள் ஆதரவுடன் அந்த குடும்பத்தை சிக்கலில் இருந்து மீட்டாரா? இறந்து போன அந்தப் பெண்மணியின் உடல் மீண்டும் அவரது சொந்த ஊருக்கு திரும்ப கொண்டு செல்ல வைக்கப்பட்டதா? பொதுமக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய சட்டம் சமயத்தில் அவர்களை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துகிறது என்பதை பரபரப்பான திரைக்கதையின் மூலம் அழகாக கூறியிருக்கிறார் அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி.
வழக்கமான அடிதடி, சண்டை மற்றும் சொந்தங்களின் துரோகம், கிராமத்து பகை போன்ற பார்முலாக்களை கைவிட்டு கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக நடித்துக் காட்டியிருக்கிறார் சசிகுமார். ஹீரோயிசம் காட்டுவதற்கு பல வழிகள் இருந்தும் அதையெல்லாம் பின்பற்றாமல் எதார்த்தமாக நடித்திருக்கிறார் சசிகுமார். மேலும் கதையின் நாயகியாக வரும் பீர்த்தி அஸ்ராணி தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார். வென்டிலேட்டருடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து தாருங்கள் என்று அவர் கலங்கிய கண்களுடன் கேட்கும் காட்சிகளில் தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார். தன்னை ஒடுக்கி வைக்க நினைக்கும் தனது தந்தையின் பிடிவாத குணத்திற்கும், ஆண் என்னும் திமிர் போன்றவற்றை அவர் எதிர்த்து கேள்வி கேட்கும் காட்சிகளில் கைத்தட்டல்களை அள்ளுகிறார். இவரின் வரவு தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வரவாக அமைந்திருக்கிறது. தனது மனைவியின் மரணத்தால் பாசம் இல்லாத முரட்டுத்தனமான கோபக்காரரான யஷ்பால்ஷர்மா எப்படி மாறுகிறார் என்பதும் “மதங்களைக் கடந்தது தான் மனிதம்” என்பதையும் இந்த படம் அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறது.
மதங்களைக் கடந்து மனிதன் எப்பேர்ப்பட்ட உதவிகளையும் செய்ய முடியும் என்பதையும், வீட்டில் இருக்கும் ஒருவரின் மரணம் ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்று அருமையான இரண்டு பாடங்களை அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி ஒரு சிறந்த கதையின் மூலம் இந்த சமூகத்திற்கு படமாக கொடுத்திருக்கிறார். சில ஆண்டுகளாக நல்ல படங்கள் இல்லாமல் தடுமாறி வரும் சசிகுமாருக்கு கண்டிப்பாக இந்த படம் திருப்புமுனையாக அமையும். சசிகுமாரின் நண்பனாக புகழ் நடித்திருப்பது அவருக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாகவே தெரிகிறது. படம் முழுவதும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருக்கிறார் புகழ். இசையமைப்பாளர் ரகுநந்தனின் பின்னணி இசை பல இடங்களில் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. தேவையில்லாத இடங்களில் பாடல்களை திணித்தது போல் இருக்கிறது. ஒரு நாளில் நடக்கும் கதையை விறுவிறுப்புடனும் அதே சமயம் பலருக்கு பாடமாகவும் சொல்லி இருக்கிறார்கள் கிளைமாக்ஸ் காட்சிகள் கண்களை குளமாக்குகின்றன.
இவர்களுடன் இணைந்து யஷ்பால் சர்மாவின் மனைவியாக வரும் அஞ்சு அஸ்ராணி, மகனாக வரும் குழந்தை அத்வைத், போஸ் வெங்கட் என அனைவரும் படத்திற்கு தேவையான இடங்களில் தங்களது சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். மனிதம் பற்றிய ஒரு எமோஷனல் கதையாக மட்டுமே இந்த படத்தை அணுகாமல் சட்ட சிக்கல்கள் மக்களுக்கு பல இடங்களில் எப்படி நெருக்கடி தருகிறது அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர். அதை எல்லாம் கடந்தது தான் மனிதம் என்பதையும் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். சில இடங்களில் நாடகத் தனங்கள் மற்றும் சினிமா தனங்கள் வெளிப்படவே செய்கின்றன. ஆனால் பரபரப்பான திரைக்கதை அனைத்தையும் மறக்கடிக்க செய்கிறது. மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா பல மாயாஜாலங்களை செய்திருக்கிறது. சான் லோகேஷின படத்தொகுப்பு 2 மணி நேரம் படத்தை பரபரப்பு உடனே வைத்திருக்கிறது. மொத்தத்தில் “மதங்களைக் கடந்தது தான் மனிதம்” அதற்காக எந்த எல்லைகளுக்கும் செல்லலாம் என்கிற சிறந்த கருத்தை சொன்ன அயோத்தி உண்மையிலேயே தரிசிக்க வேண்டிய ஒரு படம் தான். இந்த படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.5/5
Youtube Video Embed Code Credits: Saregama Tamil