சமீப காலமாக உருவக் கேலி செய்யும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது. எவ்வளவுதான் படித்திருந்தாலும் பொதுவெளியில் ஒருவரின் உருவத்தை கேலி செய்யும் நிகழ்வுகள் நடைபெறுவது வருத்தத்திற்கு உரியதாகவே உள்ளது. அதுபோலத்தான் சமீபத்தில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி தனது விமர்சனங்களை வைத்திருந்தார். அப்போது அவர் சிம்புவை பற்றியும், கௌதம் வாசுதேவ் மேனனை பற்றியும், படத்தைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் படத்தில் நடித்த துணை நடிகரின் உருவத்தையும் கிண்டல் அடித்து பேசி இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ப்ளூ சட்டை மாறனை பொருத்தவரை அவர் எந்த இயக்குனராக இருந்தாலும் சரி, எப்பேர்ப்பட்ட நடிகராக இருந்தாலும் சரி படத்தை கடுமையாக விமர்சிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அப்படித்தான் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி விமர்சனத்தை முன் வைத்தார். சிலம்பரசன் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மிகவும் எதிர்பார்ப்பில் வெளியான படம் தான் வெந்து தணிந்தது காடு. ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. பலரும் படம் நன்றாக இல்லை என்ற கருத்து என தெரிவித்தனர். அதேபோல ப்ளூ சட்டை மாறனும் படம் நன்றாக இல்லை என்ற விமர்சனத்தை முன் வைத்தார்.
பின்னர் அவர் வீணாப் போனவன் டான் ஆன கதை என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் பார்த்திபன் ஒரு அவார்ட் பைத்தியம் அதே போல கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம், இன்னும் அவருக்கு அந்த பைத்தியம் தெரியவில்லை என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனையும் தனிப்பட்ட முறையில் தாக்கி இருந்தார்.
மேலும் இந்த படத்தில் ஜாஃபர் நடித்திருப்பார். இவர் உயரத்தில் சற்று குறைவாக இருப்பார். இவரையும் தனிப்பட்ட முறையில் உருவ கேலி செய்து ப்ளூ சட்டை மாறன் பேசியிருந்தார். இதனால் ப்ளூ சட்டை மீது பலருக்கும் கடுமையான அதிருப்தி நிலவியது. இந்த நிலையில் நேற்று வெந்து தணிந்தது காடு படத்தில் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் பேசிய சிம்பு பல கருத்துக்களை தெரிவித்தார்.
தான் அவ்வளவு வலியை கடந்து வந்துள்ளேன். சிம்பு உடலை குறைத்தார், நன்றாக நடித்தார் என சொல்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் என்னை தான் வச்சி செய்தார்கள். நிறைய காட்சிகள் ஒரே சாட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் மேக்கிங் வீடியோ பார்த்தால் தெரியும். மேலும் ஜெயமோகனின் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது, ஜெயமோகனே என்னை பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் கேங்ஸ்டர் படம் கிடையாது, எப்படி ஒருவன் கேங்க்ஸடர் ஆகிறான் என்பதுதான் முதல் பாகம்.
தட்டி விடுறவன் தான் நிறைய பேர் இருக்கான் தட்டி கொடுக்க கொஞ்சம் பேர் தான் இருக்கான்.! என்னை தட்டி கொடுத்த பலருக்கும் நன்றி என சிம்பு பேசினார். மேலும் சில பேருக்கு சொல்கிறேன் ஒரு படத்தை விமர்சிக்கலாம், தனிப்பட்ட மனிதனையும் அவரது உருவத்தையும் விமர்சிப்பது ரொம்ப தவறு. தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சிக்காதீர்கள் என்று ப்ளூ சட்டை மாறனுக்கு மறைமுகமாக அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.