மெட்ரோ ஊழியரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் தற்போது விருகம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வடபழனி விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ஊழியர்கள் அந்த பகுதிகளில் தடுப்பு அமைத்து வாகனங்களை மாற்றிச் செல்ல ஒரு வழி பாதையை அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் சாலை அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்த வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் நேற்று முன்தினம் மாலை காரில் வந்துள்ளார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது காரை விட்டு இறங்கிய அவர், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையை மூடி வேலை செய்வதாக மெட்ரோ பணியில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த மெட்ரோ திட்ட உதவி மேலாளர் வடிவேல் என்பவரையும் ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த வடிவேல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

மது போதையில் இருந்த வேல்முருகன் தன்னை தாக்கியதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வடிவேல் புகார் அளித்த நிலையில், ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் என இரு பிரிவுகளின் கீழ் வேல் முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது வேல்முருகன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு எச்சரித்து, எழுதி வாங்கி காவல் நிலைய ஜாமினில் அவரை விடுவித்துள்ளனர். ஏற்கனவே இது போல கடந்த மார்ச் மாதம் சென்னை விமான நிலையத்தில் மது போதையில் பாதுகாப்பு அதிகாரியுடன் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.