
கடந்த வாரம் சென்னையில் காற்று மாசின் பாதிப்பு அதிகமானதன் காரணமாக சென்னையில் அனைத்து பகுதிகளிலும் டெல்லி போல் மாசு ஏற்பட்டு இருந்ததது, இன்று அது குறைந்து (நவ.,12) இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
சென்னையில் தொடர்ந்து, எட்டு நாட்கள் காற்று மாசு அபாய கட்டத்தில் காணப்பட்டு வந்தது. காற்றில், 1 கன சதுர மீட்டரில், நுண்துகள்கள் அளவு, 100க்குள் இருந்தால், மனிதர்களால் சுவாசிக்க முடியும். நுண்துகள்கள் அளவு அதிகரித்தால், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், சுவாசக் கோளாறு, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளிட்டவை ஏற்படும். சென்னையில், எட்டு நாட்களாக காற்றில் நுண்துகள்களின் அளவு, 200க்கு மேல் இருந்தது என்ப குறிப்பிடத்தக்கது. பல்வேறு பகுதிகளில், 300ஐ தாண்டியும் காணப்பட்டது.
இந்த நிலையில், நேற்றும் இன்றும் மாசு வெகுவாக குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. நேற்று முன்தினம், 234 ஆக இருந்த காற்று மாசு நேற்று, 184 ஆக குறைந்திருந்தது. இன்று அது மேலும் குறைந்து 50 ஆனது (மாலை 6 மணி நிலவரப்படி). காலை, மாலை வேளைகளில் பனி போல் காற்று மாசு படர்ந்து இருந்ததால், சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது இயல்பு நிலைக்கு சென்னை திரும்பியுள்ளது மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.