தேசிய பிரச்சனைகளை தீர்க்காமல் பல்கலைக்கழகத்தை விமர்ச்சிப்பதும், குற்றம்சாட்டுவதும் மட்டுமே இந்த அரசு செய்து வருகிறது என கன்னையா குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த ஒரு மாதம் காலமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மாணவர்கள் மீதான குண்டர்கள் தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார், முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார்.

நேற்று அவர் பேசுகையில், “நீங்கள் விருப்பப்படும் அளவிற்கு எங்களை விமர்சியுங்கள். தேச விரோதி என அழைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அவை ஒரு போதும் உங்களுடைய குழந்தைகளுக்கு வேலை பெற்ற தர உதவாது. பாதுகாப்பு வழங்காது. உங்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராது” என்றார்.
மேலும் பேசுகையில், “காவல்துறையினரால் நஜீப்பைக் (இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மாணவர்) கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஜே.என்.யுவின் குப்பைத்தொட்டிகளில் 3,000 ஆணுறைகளைக்கண்டுபிடித்துள்ளனர்” எனவும் விமர்சனம் செய்துள்ளார்.