வைகைப் புயல் வடிவேலு தனது 62 ஆவது பிறந்த நாளை இன்று சேலத்தில் மாமன்னன் ஷூட்டிங்கில் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. 1960 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் வடிவேலு. இவர் மதுரையில் ஒரு கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வந்த ராஜ்கிரணுடன் இவருக்கு அறிமுகம் கிடைத்தது. பின்னர் சென்னைக்கு வந்து படத்தில் நடித்த தொடங்கினார்.

1991ம் ஆண்டு ராஜ்கிரண் தயாரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானார். அந்த படத்தில் இவர் பாடும் ‘போடா போடா புண்ணாக்கு’ பாடல் மிகப் பிரபலமானது. பின்னர் அன்று தொடங்கி சங்கர் இயக்கிய காதலன் திரைப்படத்திற்கு முன்னர் வரை இவர் செந்தில் கவுண்டமணியின் உடன் இணைந்து மூன்றாவதாக காமெடி செய்து வந்தார். காதலன் படத்திலிருந்து இவர் தனியாக காமெடி செய்ய ஆரம்பித்தார்.
பிறகு அன்று தொடங்கி இன்று வரை எண்ணற்ற படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் நடிகர் வடிவேலு. நடிகர் பார்த்திபன், சரத்குமார், ரஜினி, அஜித், விஜய், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் வடிவேலு. சில காலமாக வடிவேலுக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் ஒதுங்கியே இருந்தார். பின்னர் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதனால் மீண்டும் காமெடி பக்கமே திரும்பி இருக்கிறார்.
அவர் படத்தில் நடிக்காமல் இருந்த காலங்களில் மீம்ஸ் டெம்ப்ளேட்டுகள் வழியாக அனைவரையும் சிரிக்க வைத்தார். மீம்ஸ்கள் அனைத்திலும் வடிவேலு தான் நிரம்பி வழிந்தார். இன்று கூட அவரின் காமெடிகளை கேட்டால் சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உடல் மொழியால் பலரையும் சிரிக்க வைக்கும் தன்மை கொண்டவர் வடிவேலு அவர்கள்.
தற்போது சந்திரமுகி 2, உதயநிதி ஹீரோவாக நடிக்கும் மாமன்னன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு இன்று 62 ஆவது பிறந்தநாள் இதையடுத்து மாமன்னன் பட சூட்டிங்கில் அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், இயக்குனர் மாரி செல்வராஜ், பகத் பாசில், லைகா ப்ரொடக்ஷன் உறுப்பினர்கள் மற்றும் படக்குழுவினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி பிரம்மாண்டமான முறையில் தனது 62 ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்.
நம் கவலைகளை எல்லாம் மறந்து நம்மை சிரிக்க வைத்த அந்த மாபெரும் கலைஞன் நீடூழி வாழ அவரின் 62 ஆவது பிறந்தநாளில் நாமும் வாழ்த்துவோம்.