மருதமலை தலைநகரம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறார் வடிவேலு. லைகா ப்ரொடக்ஷன் தயாரித்திருந்த இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து சிவாங்கி, ரெட்டிங் கிங்க்ஸ்லி, முனீஷ்காந்த், ஷிவானி நாராயணன், விஜய் டிவி பிரபலங்கள் ராமர், KPY பாலா உள்ளிட்ட மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைத்துறைக்கு திரும்பிய வடிவேலுக்கு இந்த படம் கை கொடுத்திருக்கிறதா இல்லையா என்பது குறித்து தற்போது விமர்சனத்தில் பார்க்கலாம்.

வடிவேலுவின் பெற்றோர்களுக்கு வெகு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் அவர்கள் பைரவர் கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டி செல்கின்றனர். அப்போது அங்கு ஒரு சித்தரும் வருகிறார். அவருக்கு மிகவும் பசியாக இருக்கிறது. வடிவேலுவின் பெற்றோர்கள் அந்த பசியை ஆற்றுகின்றனர். இதனால் மனம் நெகிழ்ந்து போன அந்த சித்தர் அந்த தம்பதிகளுக்கு நாய் ஒன்றை பரிசாக கொடுக்கிறார். அந்த நாய் வந்த நேரம் அந்த தம்பதிகளுக்கு குழந்தை ஒன்று பிறக்கிறது. அவர் தான் நாய் சேகர்(வடிவேலு). அதே நேரம் வறுமையில் வாடிக் கொண்டிருந்த அந்த தம்பதிகளுக்கு பணம் புகழ் எல்லாம் வந்து சேர்கிறது. ஒரு கட்டத்தில் வீட்டில் வேலை செய்து வரும் ஒருவர் அந்த நாயை திருடி சென்று விட திருடியவர் பணக்காரனாகி விடுகிறார். நாய் சேகரின் குடும்பம் மீண்டும் பழையபடி வறுமை நிலைக்கு செல்கிறது.
அந்த நாயை தேடி கண்டுபிடிப்பதற்காக தனது குழுவை அழைத்துக் கொண்டு நாயை தேடிச் செல்கிறார் வடிவேலு, அவர் இறுதியில் அந்த நாயை மீட்டாரா? என்ன நடந்தது என்பது குறித்த கதை தான் நாய் சேகர் ரிட்டன்ஸ். அதேசமயம் பணக்காரர்களின் நாய்களையும் கடத்தி பணம் பறிக்கும் வேலையில் வடிவேலு ஈடுபட்டு வருகிறார். அப்படி தன் குழுவினருடன் ஒரு நாயை கடத்திக் கொண்டு வருகிறார், அந்த நாய் வில்லன் ஆனந்தராஜுடையது என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. ஹைதராபாத்தில் இருக்கும் பெரிய கையான மேக்ஸ் இடமிருந்து தங்கள் குடும்பத்திற்கு ராசியான நாயை நாய் சேகர் மீட்க முயற்சிப்பதை இரண்டாம் பாதியில் காட்டியிருக்கிறார்கள். அந்த முயற்சியில் நாய் சேகர் ஜெயித்தாரா என்பதுதான் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை.
நாய்களை கடத்தும் ஹீரோ என்பது வித்தியாசமான கதையாக இருந்த போதிலும் திரைக்கதையில் சொதப்பி எடுத்து இருக்கிறார்கள். வடிவேலுவின் பழைய ஜோக்குகளை மட்டுமே நம்பி இயக்குனர் சுராஜ் இந்த படத்தை எடுத்திருக்கிறார். வடிவேலு படத்தைப் பார்த்துவிட்டு சிரிக்கலாம் என்று நம்பி சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரெட்டிங் கிங்ஸ்லியின் காமெடிகள் ஓரளவுக்கு கை கொடுத்து இருக்கிறது. ஷிவானி மற்றும் சிவாங்கி இருவரும் சில காட்சிகளை மட்டுமே வரும் பொழுதும் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். இரண்டாம் பாகத்தில் வடிவேலு தனது நாயை தேடி செல்லும் கதை மட்டுமே ஓரளவிற்கு பார்க்கும்படியாக இருக்கிறது. மற்றபடி சொல்லிக் கொடும்படியாக படத்தில் வேறு எந்த மாற்றத்தையும் இயக்குனர் கொடுக்கவில்லை. சந்தோஷ் நாராயணனின் இசையும் பின்னணி பாடல்களும் ஓகே என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது.
வடிவேலு தனது நடிப்பில் எந்த ஒரு புதிய பாணியையும் கையாளவில்லை. பழைய உடல் மொழிகளையும் பழைய வசனங்களையும் அப்படியே கையாண்டு இருக்கிறார் .படத்தில் பல காமெடியன்கள் இருந்தாலும், ஆனந்தராஜ் மற்றும் கிங்ஸ்லி செய்யும் காமெடிகள் தான் நம்மை சிரிக்க வைக்கிறது. வடிவேலு தனியாக நின்று காமெடியில் களமாடும் ஒரு மிகப்பெரிய ஜாம்பவான். ஆனால் அவர் களமாடுவதற்கு ஏற்ற களத்தை சுராஜ் இங்கே அமைத்துக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. மீண்டும் ஒரு நல்ல கதையம்சத்துடன் வடிவேலு கம் பேக் கொடுப்பார் என்பதை நாம் நம்புவோம்.! நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 2.5/5
Youtube Video Code Embed Credits: Sun TV