விஜய் டிவியில் பல சீரியல்களை இயக்கிய இயக்குனர் தாய் செல்வம் தற்போது மறைந்துள்ள செய்தி பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீசன் 1, நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன், ஈரமான ரோஜாவே 2 போன்ற சீரியல்களை இயக்கிய தாய் செல்வம் இன்று மரணம் அடைந்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் மௌன ராகம். இது இசை கதையை பிண்ணனியாக கொண்ட வங்காள மொழி தொடரான “போட்டால் குமார் கான்வாலா” என்னும் சீரியலின் ரீமேக் ஆகும். இந்தத் தொடரை முதன்முதலாக தாய்செல்வம் இயக்கியிருந்தார். பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரையும் இயக்கி இருந்தார். இதில் மிர்ச்சி செந்தில் இரட்டை வேடங்களில் நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ரேஷ்மி நடித்து வந்தனர்.

பின்னர் கதையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு சீசன் 2வில் ரட்சிதா மகாலெட்சுமி நடித்து வந்தார். அது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான காத்து கருப்பு, தாயுமானவன், மௌனராகம் சீசன் 1, கல்யாண முதல் காதல் வரை போன்ற சீரியல்களையும் அவர் இயக்கியிருக்கிறார். தற்போது பாவம் கணேசன், ஈரமான ரோஜாவே சீசன் 2 ஆகிய சீரியல்களை அவர் இயக்கி வந்தார். மேலும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான நியூட்டனின் மூன்றாம் விதி என்கிற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் இன்று எதிர்பாராத விதமாக மரணம் அடைந்திருக்கிறார். இந்த செய்தி சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மரணத்திற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவரின் புகைப்படத்தை பகிர்ந்து விஜய் தொலைக்காட்சி உங்கள் படைப்புகள் என்றும் எங்கள் மனதில் என்று அவர் இயக்கிய நாடகங்களை பட்டியலிட்டு அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறது. மேலும் அவருக்கு இரங்கல் தெரிவித்து ரட்சிதாவின் கணவர் தினேஷ், நடிகர் திரவியம் ஆகியோர் இரங்கல் பதிவுகளை போட்டு வருகின்றனர்.