கேப்டன் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் தற்போது ஹீரோவாக புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். அந்த படத்தின் பட பூஜை இன்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த பூஜையில் சண்முக பாண்டியன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். காட்டு யானைகளின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட அந்த படத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் சண்முக பாண்டியன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் வந்த போதிலும் தமிழக மக்களுக்கு மிகப் பிடித்த நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்த விஜயகாந்த் தமிழக மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்கிற கட்சியை தொடங்கினார். கட்சி ஆரம்பித்த முதல் வருடத்திலேயே 10 சதவீத வாக்குகளை பெற்று தமிழகத்தின் இரு துருவங்களாக இருந்த திமுக மற்றும் அதிமுகவை ஆச்சரியப்பட வைத்தார்.
பின்னர் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தோல்வியை தழுவவே, விஜயகாந்தின் மனதும் உடலும் மிக குன்றிப் போனது. இதனால் வீட்டிலேயே முடங்கி விட்டார் கேப்டன் விஜயகாந்த். இது அவரது திரை ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்களிடையே மிகுந்த சோர்வை ஏற்படுத்தியிருந்தது. சிங்கம் போல் இருந்த மனிதர் தற்போது பேசக்கூட முடியாத நிலையில் இப்படி ஆகிவிட்டார் என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவில் சென்று சிகிச்சை பெற்று வந்த பிறகும் கேப்டனால் பழைய நிலைமை போல பேச முடியவில்லை, எழுந்து நடக்க முடியவில்லை, அவ்வப்போது தனது கட்சி தொண்டர்களை சக்கர நாற்காலியில் வந்து சந்தித்துக் கொண்டிருக்கிறார் கேப்டன். அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மூத்த மகன் விஜய பிரபாகரன், மச்சான் சுதீஷ் ஆகியோர் கட்சியை தற்போது கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே மதுரை வீரன் என்கிற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. தற்போது வால்டர், ரேக்ளா உள்ளிட்ட படங்களை இயக்கிய அன்பு இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தில் கஸ்தூரிராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டைரக்டர் சினிமாஸ் என்கிற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
புதுமையான கதை களத்துடன் காட்டுக்குள் நடக்கும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இந்த கதை உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இருக்கின்றனர். முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள காடுகளிலும், ஒரிசா மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளிலும் மீதமுள்ள படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பை ஆடி பதினெட்டாம் தேதியான ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
படம் குறித்த மற்ற விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.