தன் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தற்போது பிக்பாஸ் விக்ரமன் பதிலளித்திருக்கிறார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை அவர் அளித்திருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் மூலமாக பிரபலமானவர் விக்ரமன். சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பிக்பாஸ்க்கு பின்னர் இவருக்கு ரசிகர் பட்டாளம் மிகப்பெரிய அளவில் கூடியது. இவர் சொல்லும் “அறம் வெல்லும்” என்கிற வார்த்தை இணையத்தில் டிரெண்டாக தொடங்கி இருந்தது. பிக்பாஸில் டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக இயங்க போவதாக அறிவித்திருந்தார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் மாநில செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் விக்ரமனின் தோழி மற்றும் நண்பர் என்று சொல்லிக் கொண்ட கிருபா முனுசாமி என்ற லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், விக்ரமன் தன்னிடம் இருந்து பணம் மற்றும் பொருளை ஏமாற்றி விட்டதாகவும், என்னை போல 15 பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.அந்த குற்றச்சாட்டுகளுக்கு தற்போது விக்ரமன் பதிலடி கொடுத்திருக்கிறார். கிருபா முனுசாமி என் மீது சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல என் கதைக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது. நாங்கள் 2020 ஆம் ஆண்டு தான் முதல் முறையாக அறிமுகமானோம்.
அவர் முனைவர் பட்டத்திற்காக இங்கிலாந்து சென்ற பிறகு ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்ள ஆரம்பித்தோம். தற்போது என் மீது கூறப்படும் இந்த இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பழிவாங்கும் நோக்கத்திற்காகவும், என்னுடைய அரசியல் மற்றும் தொழில் வாழ்க்கையை முடிக்கவும் செய்யப்படுகிறது. நான் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்திற்காக இவ்வாறு செய்கிறார்கள். இத்துடன் சில பதிவுகளையும் நான் இணைத்திருக்கிறேன். அதில் முதல் பதிவில் லண்டனில் இருந்த போது அவர் எனக்கு எழுதிய கடிதத்தை இணைத்து இருக்கிறேன், நான் உண்மையில் ஒரு துஷ்பிரயோகம் செய்பவராக இருந்திருந்தால், நியாயமான எந்த ஒரு நபரும் இப்படி ஒரு கடிதத்தை எனக்கு எழுதியிருக்க மாட்டார்கள்.
இரண்டாவது இணைப்பில் கிருபா அவர்களின் சொந்த விருப்பத்தின் பெயரில் எனது தொழில் முறை நோக்கங்களுக்காக எனது வேண்டுகோளின் பெயரில் அவர் வழங்கிய கட்டுரைகளுக்கு பணம் செலுத்தியதற்கான ஆதாரம். எனக்கு கொடுக்கப்பட்ட கட்டுரைகளுக்கு பணம் கொடுப்பதாக நான் உறுதியளித்திருந்தேன். நான் உறுதியளித்தபடி முழு தொகையையும் உடனடியாக செலுத்தி விட்டேன். என் மீது சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் முற்றிலும் மறுக்கிறேன். குற்றச்சாட்டுகளை அனைத்தையும் மறுதலிக்கிறேன். சட்டத்தின் கீழ் என்னுடைய மேல் எந்த தவறும் இல்லை என்பதை நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். அறம் வெல்லும். என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் தான் பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்னர் உடனடியாக 12 லட்சம் ரூபாயை கிருபாவின் கணக்கில் செலுத்தியதற்கான ஆதாரத்தையும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.