
ட்விட்டரிலிருந்து விலகியதறகான காரணம் என்ன என்று குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.சமீபமாக ட்விட்டர் தளத்தில் எப்போதுமே தனது கருத்துகளை பதிவு செய்யும் நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பு. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் குஷ்பு, பாஜக கட்சியினர் தொடர்பான செய்திகளுக்கு தன்னுடைய எதிர்ப்புகள் அனைத்தையுமே உடனுக்குடன் தனது ட்விட்டர் பக்கத்திலேயே பதிவு செய்து வந்தார்.
மேலும், கணவர் சுந்தர்.சி இயக்கி வரும் படங்கள் குறித்த செய்திகள், ட்ரெய்லர் வெளியீடு ஆகியவற்றையும் குஷ்புவே பதிவு செய்வார். தன்னை ஒரு முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் என்று பலரும் கூறி வந்தபோது, ‘ஆம். நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்தான். என் பெயர் நக்கத் கான்’ என்று வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் குஷ்பு.
இவ்வாறு ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக தனது கருத்துக்களை வந்தவர், தற்போது அவரது பக்கத்தை நீக்கிவிட்டார். இதற்கு எவ்விதக் காரணத்தையும் குஷ்பு தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக குஷ்புவிடம் கேட்டபோது, “எனது ட்விட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன். ட்விட்டர் தளத்தில் இயங்க வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக கூறினார். இதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவுமில்லை. நிம்மதியாக வாழ விரும்புகிறேன். ட்விட்டர் தளத்தில் நிறைய எதிர்மறை விஷயங்களே உள்ளன. ஆகவே, நான் எனது இயல்பில் இல்லை” என்று தெரிவித்தார் குஷ்பு.