கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து இதுவரை 65 பேர் இருந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக்கில் அடெல் அப்துல் மஹ்தி பிரதமராக இருந்து வருகிறார். தற்போது அந்நாட்டில் அதிகரித்து வரும் ஊழல், வேலையின்மை போன்றவற்றால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வறுமையும், விலை உயர்வும் பெருகி வருகிறது. இதானல் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகின்றன.
தலைநகர் பாக்தாத்தின் மத்திய சதுக்கத்தை நோக்கி ஆயிரம் பேர் கலந்துகொண்ட அரசுக்கு எதிரான பேரணியில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கலவரம் மூண்டது.
இம்மோதல் காரணமாக 65 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 192 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனால் ஈராக்கில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. பல உயிர்கள் பலியாகி இருப்பதற்கு பொறுப்பேற்று அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவரான முக்ததா அல் சதர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “தற்போதைய அரசை உடனடியாக கலைத்துவிட்டு ஐ.நா சபையின் நேரடி பார்வையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக அரசு பதிலளிக்கும் வரை நாடாளுமன்றத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும்” என்றார்.
இக்கலவரம், ஷியா மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.