கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரின் அமலாக்கத்துறை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான ஒக்காலிகா சங்கங்கள் பெரும் போராட்டத்தை இன்று (செப்.11) முன்னெடுக்க முடிவு செய்துள்ளன.
கர்நாடகத்தில் அரசியல் பலம் வாய்ந்த சமூகங்களாக லிங்காயத் மற்றும் ஒக்காலிகா ஆகியவை இருக்கின்றன. பாஜகவிற்கு லிங்காயத் சமூகத்தில் பெரும் செல்வாக்கு இருக்கிறது. அதே போல முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகெளடா மற்றும் காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிவகுமார் ஆகியோருக்கு ஒக்கலிங்கா சமூகத்தில் பெரும் செல்வாக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சிவகுமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதனை பாஜவின் அரசியல் பழிவாங்கல் என்று கூறிவரும் நிலையில், அவரது மகளான ஐஸ்வர்யாவிற்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே பாஜவிற்கு லிங்காயத் சமூக ஆதரவு பெரும்பாமையாக இருப்பதால், இந்த நடவடிக்கைகளை ஒக்காலிகா சமூகத்திற்கு எதிராக திருப்பியுள்ளது. ஆகவே கைது நடவடிக்கையை கண்டித்து 10க்கும் மேற்பட்ட ஒக்கலிங்கா அமைப்புகள் ஒன்றிணைத்து கர்நாடகத்தில் இன்று பெரும் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.
பல அமைப்புகளை சார்ந்த 10 ஆயிரதிற்கும் மேற்பட்ட ஒக்காலிகா மக்கள் ஒன்றிணைந்து பசவனாகுடி தேசிய கல்லூரி முதல் பழைய மத்திய சிறை வரையில் இந்த பேரணி நடைபெற இருக்கிறது. இந்த போராட்டம் குறித்து தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகுமார், “பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக தனக்கு ஆதரவு அளித்த தலைவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், போராட்டமானது சட்டத்திற்கு உட்பட்ட வண்ணம் நடைபெற வேண்டுமெனவும்” பதிவிட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வருமானவரி துறையினர் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.