
இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து வெளியே தள்ளும் முன்பு தோனி தாமாக முன்வந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் காப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மென் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று பலர் கூறிவருகின்றனர். ஆனால் தோனி அவர்கள் இதற்கு பதிலளிக்கவில்லை. மேலும் மேற்கிந்திய தீவுகள் (வெஸ்ட் இண்டீஸ்) அணியுடன் நடந்த போட்டிகளில் இருந்து ஒதுங்கியதுடன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது வங்காளதேசத்துடன் நடக்கவிருக்கும் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் தோனியை சேர்க்க வேண்டுமா? என்று கேட்டதற்கு கவாஸ்கர் அவர்கள்,
“வங்காளதேசத்துத்கு எதிரான போட்டியில் தோனியை சேர்க்க வேண்டியதில்லை. தோனிக்கு பதிலாக அவர் இடத்திற்கு யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டிய தருணம் இது. அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரவிருப்பதால் நிச்சயமாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்க்கு வாய்ப்பளிக்க வேண்டும் “
இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் ரிஷாப் பண்ட் போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்றால் தன்னுடைய அடுத்த தேர்வு சஞ்சு சாம்சன் தான் என்றும் அவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மென் என்றும் கூறியுள்ளார். தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய தருணம் என்றும் கூறினார்.
“இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார். இருப்பினும் அவரை தாண்டி அவருடைய இடத்திற்கு அடுத்த வீரரை கொண்டு வரவேண்டிய நேரம் இதுவாகும். தோனியை வலுக்கட்டாயமாக அணியில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்பு அவரே சென்று விடுவார் என்று நினைக்கிறேன்.”
என்று கவாஸ்கர் அவர்கள் கூறியதோடு ரிஷாப் பண்ட் டெஸ்ட் போட்டியை சிறப்பாக தொடங்கி இருப்பதாகவும் அவரை மேலும் மெருகேற்ற வேண்டும் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.