
கேரளாவில் 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தென்மேற்குப் பருவமழை முடிந்து தமிழகத்தில் கடந்த 17-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஓமன் கடற்பகுதி நோக்கிச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால் கேரளாவின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. கொச்சியில் நேற்று முதலே விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இதனால் நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால் கொச்சியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே ஆலப்புழா, கோட்டயம், உட்பட பிற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இங்கு 24 மணிநேரத்தில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.கொல்லம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.