
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாகக் கன மழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை, இந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி அன்று தொடங்கியது, இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழக கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரை அருகில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. எனவே, தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோர மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பல்வேறு இடங்களில் கன மழைக்கும் ஒரு சில இடங்களில் அதீத கனமழைக்கும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் அதி கனமழை வரை இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்றும் அதே நிலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.