கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு சம்பவம் என்று சொன்னால், அது கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதியின் இறப்பு தான். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள கணியாமூர் பகுதியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி இவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் பரவின. ஆனால் இவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பின் மண்டையில் அடிபட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாலேயே இறந்துவிட்டதாகவும் பிரதே பரிசோதனை அறிக்கை வெளியானது. வயிற்று மார்பு பகுதிகளில் நகக்கீறல்கள் இருப்பதால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர்கள் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு சந்தேகத்தை கிளப்பி வந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அமைதியான முறையில் போராடி வந்தனர். ஆனால் நேற்று முன்தினம் இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளியை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள், ரெக்கார்டுகள், மேசை போன்ற அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. பலர் மேஜைகளை நாற்காலிகளை தூக்கிக் கொண்டு ஓடினர். பள்ளிக்கு சொந்தமான 50 பேருந்துகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதனால் பள்ளி மொத்தமாக உருக்குலைந்து போனது. பள்ளியின் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், மாணவி தற்கொலை தான் செய்து கொண்டார் என்றும், 3500 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் இது போன்ற சம்பவம் நடந்ததிற்கு ஸ்ரீமதியின் தாயார் தான் முழு பொறுப்பு என பள்ளி விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் பலரும் ஸ்ரீமதியின் இறப்பிற்கு நீதி கேட்டு வரும் நிலையில் #justiceforsrimathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. தற்போது முதல் முறையாக திரைத்துறையிலிருந்து ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு பிரியா பவானி சங்கர் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவரும் #JusticeForSrimathi என்ற ஹேஷ்டேக்கை ஸ்ரீமதியின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் ப்ரியா பவானி சங்கரை வாழ்த்தி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் தமிழ் பெண் தமிழ் பெண் தான். ஒரு தமிழருக்காக முதல் ஆளாக குரல் கொடுக்கிறார் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். திரைத்துறையில் இருந்து யாரும் வாய் திறக்காத நிலையில் பிரியா பவானி சங்கர் போட்டுள்ள இந்த பதிவு வரவேற்பை பெற்றுள்ளது.
