பொதுவாகவே ஜவுளி கடை, நகைக்கடை, துணிக்கடை விளம்பரங்களில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் அல்லது மிகப் பெரிய மாடல்களை வைத்து தங்களது நிறுவனங்களின் விளம்பரங்களை எடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறையை முதன்முதலில் ஒழித்தவர் தி லெஜெண்ட் சரவணன் என்றே சொல்ல வேண்டும். அதற்கு முன்பாகவே வசந்த் அண்ட் கோ வின் வசந்தகுமார் மற்றும் லலிதா ஜுவல்லர்ஸ்-ன் கிரண் குமார் போன்றவர்கள் அவர்களது கடையின் விளம்பரங்களில் நடித்திருந்தாலும் தி லெஜெண்ட் சரவணா சற்று வித்தியாசமானவர். முன்னணி நடிகைகளான தமன்னா, ஹன்சிகா போன்றவர்களுடன் ரொமான்ஸ் மற்றும் நடனமாடி சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் இவர் பல உருவ கேலிகளுக்கு ஆளாக்கப்பட்டார். இவரை கலாய்த்து மீம்ஸ்களும் பறந்தன.

தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கும் ஆசை வந்ததால், தி சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தானே உருவாக்கி விளம்பரப் படங்களை இயக்கிக் கொண்டிருந்த ஜேடி – ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்களை வைத்து தி லெஜென்ட் என்ற படத்தை இயக்கினார். இது ஜூலை 28ஆம் தேதி உலகம் முழுவதிலும் 1200 திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. தமிழகத்தில் மட்டும் 650 திரையரங்குகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ஐந்து நாட்களில் 12 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மற்றொரு கடை உரிமையாளர் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அவரே அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

லலிதா ஜுவல்லர்ஸ்-ன் உரிமையாளரான கிரண்குமாரும் தி லெஜெண்ட் சரவணன் போலவே தனது கடை விளம்பரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரிடம் சினிமாவில் நடிப்பீர்களா என்பது குறித்து கேட்கப்பட்டபோது அந்த ஆசை எனக்கு சுத்தமாக இல்லை, என்னால் நடனம் எல்லாம் ஆட முடியாது, என் கடை விளம்பரங்களில் கூட கையை கட்டிக் கொண்டு சாதாரணமாகதான் நடித்து வருகிறேன். எனக்கு அது போன்ற ஆசை எனக்கு எதுவுமே இல்லை. தற்போது இருக்கும் இடமே போதும் என்று கூறினார்.