
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி வரும் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின் என்று அறிவிப்பு வெளியான உடனே பல பேர் வியப்படைந்தனர். காரணம் இதே முருகதாஸ் இயக்கத்தில் தான் நடித்த கஜினி படம் குறித்து நயன்தாரா முன்பு பேசியது தான். கஜினி படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று முன்னரே நயன்தாரா கூறியுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் அந்த தவறு குறித்து தற்போது ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் நயன்தாரா. ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், என் திரையுலக வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு கஜினி படத்தில் நடித்தது தான் என்று கூறியுள்ளார். கஜினி படத்தில் அசின் தான் கதாநாயகி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நயன்தாரா மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடியிருப்பார்.
முருகதாஸ் தன்னிடம் கூறியபடி தனது கதாபாத்திரத்தை திரையில் காட்டாமல் ஏமாற்றிவிட்டதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். தன்னிடம் ஒன்றை கூறி வேறு மாதி படத்தை எடுத்ததால் நயன்தாரா கோபம் அடைந்தார். தர்பார் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு நயன்தாரா இப்படி பேட்டி அளித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சம்பள பாக்கி என்று கூறி தர்பார் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கிற்கு நயன்தாரா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் பேட்டி அளிக்க மாட்டார். இந்நிலையில் அவர் ஏன் திடீர் என்று இப்படி ஒரு பேட்டி கொடுத்துள்ளார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.