தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் நடிகர் விஷால் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் லத்தி. போலீஸ் அதிகாரியாக லத்தி படத்தில் நடித்திருக்கிறார் விஷால். இந்த படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர். ஏ.வினோத்குமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. அதனால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சத்யம் திரைப்படத்திற்கு பின்னர் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கும் விஷாலின் ஆக்சன் காட்சிகளை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் படம் இன்று வெளியாகியுள்ளது. லத்தி திரைப்படம் ரசிகர்களை திருப்தி செய்து உள்ளதா? இல்லை ஏமாற்றியதா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

காவல்துறையில் ஒரு கான்ஸ்டபிள் ஆக வேலை பார்த்து வருகிறார் விஷால். இவர் லத்தி ஸ்பெஷலிஸ்ட் முருகானந்தம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷாலுக்கு மனைவியாக சுனைனாவும் ஒரு குழந்தையும் இருக்கிறார்கள். கான்ஸ்டபிள் வேலை பார்த்து வரும் விஷாலிடம் ஒருநாள் இரவு ஒரு பெண் காவல் நிலையத்திற்கு வந்து தன்னை காதலிக்க சொல்லி ஒருவன் தொந்தரவு செய்கிறான் என்று புகார் அளிக்கிறார். பின்னர் அந்தப் பையன் வீட்டிற்கு நேரில் சென்று அவனை எச்சரித்துவிட்டு வருகிறார் விஷால். அடுத்த நாள் காலை அந்த பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இதனால் அந்த பெண் கொடுத்த புகார் அடிப்படையில் அந்த பையன் மீது சந்தேகப்பட்டு விஷால் அந்த பையனை கைது செய்து லாக்கப்பில் வைத்து அடித்து உதைக்கிறார். பின்னர் அந்தப் பெண் மரண வாக்குமூலம் கொடுக்கிறார். அவர் கொடுத்த அடையாளங்களுடன் விஷால் லாக்கப்பில் வைத்து அடித்து உதைத்த பையனுடன் ஒத்துப் போகவில்லை. இதனால் தவறான நபரை லாக்கப்பில் வைத்து அடித்ததற்காக விஷால் ஒரு வருடம் பணி நீக்கம் செய்யப்படுகிறார் விஷால்.

ஆனால் 6 மாதத்திற்குப் பின் டிஜிபியாக இருக்கும் பிரபுவின் சிபாரிசு மூலம் மீண்டும் வேலையில் சேர்ந்து விடுகிறார். இந்த நிலையில் பிரபுவின் மகளிடம் பிரபல தாதாவாக இருக்கும் சுறாவின் மகன் வெள்ளை என்பவன் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறான். இதனால் யாருக்கும் தெரியாமல் வெள்ளையை கடத்தி ஒரு தனி இடத்தில் வைத்திருக்கிறார் பிரபு. அப்போது அங்கு லத்தி ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் முருகானந்தத்தை(விஷால்) வரவழைத்து அடிக்க சொல்கிறார். காலில் அடித்து அவனை நடக்கக்கூட முடியாமல் செய்ய வேண்டும் என்று முருகானந்தத்திற்கு ஆணை இடுகிறார். விஷாலும் பிரபல தாதாவின் மகனான வெள்ளையை அடித்து வெளுத்து வாங்குகிறார். முகத்தை மூடி வைத்து அடிக்கும் போதிலும் விஷாலை ஒரு கட்டத்தில் பார்த்து விடுகிறார் வெள்ளை. இதனால் விஷாலின் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று வெள்ளை திட்டம் போடுகிறார். பின்பு விஷாலின் குடும்பத்திற்கு வெள்ளையால் என்ன ஆனது? அந்த பெண்ணை கற்பழித்த நபரை விஷால் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது.
தான் படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தில் வழக்கம்போல் இல்லாமல் விஷால் மிகவும் மெனக்கெட்டு போலீசாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டி எடுத்து இருக்கிறார் விஷால். கதாநாயகியாக வரும் சுனைனாவும் அவருக்கு மகனாக வரும் அந்த சிறுவன் நடிப்பும் மிக நேர்த்தியாக இருந்தது. ஒரு காவல்துறை உயர் அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் கான்ஸ்டபிள் ஆக ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால். பின்னர் அதனால் தனக்கு வரும் துன்பங்கள் குறித்தும் அவர் கதையை நகர்த்தி சென்று இருக்கிறார். கதைக்களம் புதியதாக இருந்த போதிலும் முதல் பாதியை பொறுமையாக நகர்கிறது. இரண்டாம் பாதி முழுவதுமே சண்டைக் காட்சிகளால் நிரம்பி வழிகிறது. சில இடங்கள் ரசிக்கும் படியாக இருந்த போதிலும் பல லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தது. ஒரு லத்தியை வைத்து 500 நபர்களை அடித்து துவைத்து கொண்டிருக்கிறார் விஷால். இந்த லாஜிக் ஓட்டைகள் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை பெரும்பாலும் பொறுமையை இழக்க வைத்தது.

பல இடங்களில் அடிவாங்கியும் கத்தியால் குத்திய போதும் முகம் கண்ணெல்லாம் வீங்கிய போதும் மீண்டும் மீண்டும் எழுந்து ஒரு லத்தியை வைத்துக்கொண்டு அடித்து துவைத்துக் கொண்டிருக்கிறார் விஷால். இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் சண்டைக் காட்சிகளை மட்டுமே நம்பி இயக்குனர் இந்த கதையை நகர்த்திச் செல்ல முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் இது பார்வையாளர்களின் பொறுமையை சோதித்து விட்டது. இந்த ஸ்டண்ட் காட்சிகளை இயக்கிய பீட்டர் ஹேயின் மாஸ்டர் சிறப்பான உழைப்பை கொடுத்தி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் பெரிய அளவில் எடுபடவில்லை. பேக்ரவுண்ட் மியூசிக் ஓரளவிற்கு கை கொடுத்துள்ளது. ஒளிப்பதிவு எடிட்டிங் அனைத்தும் ஓகே. சண்டை காட்சிகளை குறைத்து விட்டு, தந்தை மகன் செண்டிமெண்ட்டுகளை குறைத்து விட்டு படத்தை நகர்த்தி இருந்தால் இந்த படம் வேறு விதமாக வந்திருக்கும். ஆனால் விஷாலின் கடின உழைப்பிற்காகவே இந்த படத்தை ஒருமுறை திரையில் பார்க்கலாம்.

பாசிட்டிவ் விஷயங்கள்
- விஷாலின் நடிப்பு.
- சிறந்த ஆக்சன் காட்சிகள்.
- சிறந்த ஒளிப்பதிவு.
- கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை வெளிப்படுத்திய விதம்.
- விஷால் ஒருவர் மட்டுமே முழு படத்தையும் தாங்கி நிற்பது.

நெகட்டிவ் விஷயங்கள்
- பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள்.
- சுத்தமாக சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.
- இரண்டாம் பாதி முழுவதும் சண்டை.
- தேவை இல்லாத இடங்களில் அப்பா மகன் சென்டிமென்டை திணித்தது.

மொத்தத்தில் விஷால் என்ற ஒருவருக்காகவும் அவருடைய மெனக்கிடலான ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் படத்தை ஒரு முறை பார்க்கலாம். படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 2.5/5
Youtube Video Code Embed Credits: Sun Tv