கடந்த 16 ஆண்டுகளில் சுமார் 180 லாக்கப் மரணங்கள் குஜராத்தில் நடந்திருப்பதாகவும், ஆனால் இது தொடர்பாக காவல்துறையினர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கபடவில்லை என தேசிய குற்ற பதிவுகள் பணியகத்தின் தகவல் கூறுகின்றது.
2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லாக்கப் மரணங்கள் என்பது பரவலாக பேசப்பட்டு வந்தது. விசாரணைக்காக காவல் நிலையம் செல்லும் நபர், மரணித்து தான் வீடு திரும்புவார். இவ்வாறு நிலைமைகள் இருந்த நிலையில் மனித உரிமை ஆணையம் மற்றும் அதற்கான அமைப்புகள் உருவான பின்னர் இதுபோன்ற லாக்கப் மரணங்கள் குறைந்துள்ளன.
ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, நாடு முழுக்க 1,557 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. ஆனால் இவற்றுள் 704 மரணங்களுக்கு மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை சுமார் 242 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் 188 மரணங்களுக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதைப்போல மகாராஷ்டிரா மாநிலத்தில் 362 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் வெறும் 43 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
மேலும் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கைகளில், மகராஷ்டிரா 28 மற்றும் ஆந்திரப் பிரதேசம் 13 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

ஆனால் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட 180 லாக்கப் மரணங்களுக்கு 26 வழக்குகள் மட்டுமே பதியப்பட்டு வெறும் 10 வழக்குகளுக்கு மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மாநிலத்தின் 168 காவல்துறையினருக்கு ‘சிறப்பான சேவை’க்காக பதக்கங்களை வழங்கினார். விருது பெற்றவர்களில் பி.பி.பாண்டேவும் ஒருவர். இவர் முன்னாள் மாநில டிஜிபியாக பணியரியவர். மேலும் இவருக்கு இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.