திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு விளக்கப்பட்டு இருப்பது அவரை மிரட்டுவதற்காக தான் என திமுக எம்பியும் மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு அவரை அச்சுறுத்துவதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கண்துடைப்புக்காக துணை முதல்வருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் பேசுகையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களே பாதுகாப்பு அரணாக இருக்கும் போது மற்ற எந்த பாதுகாப்பும் தேவையில்லை.
ஆட்சியில் உள்ளவர்கள் தான் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தான் பாதுகாப்பு தேவை” எனக் கூறினார்.