அரசியல் விளம்பரங்களில் பொய்ச் செய்திகளை தடுக்க முடியாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமகால அரசியலில் சமூக வலைத்தளங்களின் அரசியல் பங்கேற்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதற்கென்றே ஒவ்வொரு கட்சிகளும் அணிகளை வைத்து செயல்பட்டு வருகின்றன. தலைவர்களின் சிந்தனை, கட்சிகளின் கொள்கைகள், நலத்திட்டங்கள் போன்ற எண்ணற்ற அரசியல் செயல்பாடு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால் அதே வேளையில் பொய் செய்திகளும் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. இது தற்போதைய அரசியல் களத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் பாஜக சார்பில் அதிக பொய்கள் பரப்பப்பட்டு வருவது பல ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பேஸ்புக்கில் பதிவிடப்படும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் விளம்பரங்கள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பல விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. விளம்பரங்கள் என்ற பெயரில் பொய்பிரசாரம் செய்வதை தடுக்க பேஸ்புக் நிறுவனம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றம் வலியுறுத்தி உள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், அரசியல் விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது. ஆனால் அவற்றை பயனாளர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. அதேசமயம் அரசியல் விளம்பர கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர முடியாது என அந்த நிறுவனம் கூறியுள்ளது.