ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குண்டர்கள் தாக்குதல் தொடர்பாக 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த குண்டர்கள் புகுந்து இடதுசாரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தாக்கினர். இதில் மாணவர் சங்க தலைவர் கோஷ் உள்பட பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களை கைது செய்ய கோரி அப்பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
37 பேரும் “இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை” என்ற பெயரில் செயல்பட்டு வந்த வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருந்ததை சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது. அதில் 12 பேர் எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர்கள் என தெரியவந்துள்ளது.
அந்த வாட்ஸ்அப் குழுவில் இடம்பெற்றிருந்த மாணவர் அல்லாத 10 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக ஏ.பி.வி.பி. அமைப்பின் செயலாளர் மணிஷ் ஜான்கிட் அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.