விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் 1000 எபிசோடுகளை முடித்ததையடுத்து தற்போது சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் மக்களின் மனம் கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது ‘பாக்கியலட்சுமி’ சீரியல்.
குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு தனது கணவர், மாமனார் மாமியார், மகன்கள் மற்றும் மருமகள் சந்திக்கும் சிக்கல்களையும், தனது தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் தனி ஒரு பெண்ணாக இருந்து போராடும் ‘ஒரு குடும்ப தலைவியின் கதையை’ மையமாகக் கொண்டு இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர்கள் சிவசேகர் மற்றும் டேவிட் ஆகியோர் இயக்கத்தில் கடந்த 2020 ஜூலை 27 முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் பாக்யாவாக சுசித்ரா ஷெட்டியும், ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டியும், கோபியாக சதீஷ்குமாரும் நடித்து வருகின்றனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் வேலு லட்சுமணன், ராஜலட்சுமி, திவ்யா கணேஷ், விஜே விஷால், நேஹா, கம்பம் மீனா செல்லமுத்து, ரஞ்சித் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படிப்பறிவு கொஞ்சம் கூட இல்லாத பாக்யாவை மெத்த படித்த, வங்கியில் வேலைப் பார்க்கும் கோபி திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்தில் கோபிக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. பின்னர் ஒரு கட்டத்தில் தனது கல்லூரி காதலியான ராதிகாவை சந்திக்கிறார்.
ராதிகாவும் கணவருடன் விவாகரத்தாகி தனியாக வாழ்ந்து வருகிறார்.இதை தெரிந்து கொள்ளும் கோபி, பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். அங்கிருந்து பிரச்சினைகள் தொடங்குகிறது.
பின்னர் ஒவ்வொரு பிரச்சினைகளை தீர்க்க பாக்யா எடுக்கும் முடிவுகளும், சொந்த காலில் நிற்பதற்காக அவர் எடுக்கும் தொழில் முயற்சிகளும் கதையை வெற்றிகரமாக நகர்த்தி வருகிறது.
பல சோதனைகளை தாண்டி தன்னுடைய தொழிலையும், தன்னுடைய குடும்பத்தையும் சரிசமமாக நடத்தி வருகிறார் பாக்யா. கடந்த மூன்று வருடங்களாக டாப் 10 டிஆர்பி ரேட்டிங் பட்டியலிலும் இந்த சீரியல் இடம் பிடித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கதைப்படி தன்னுடைய மகன் செழியன் வாழ்க்கையை எப்படி சரி செய்யப் போகிறார்? எழில் மனைவி அமிர்தாவின் முன்னாள் கணவரான கணேஷ் வருகையை பாக்யா எப்படி சமாளிக்க போகிறார்? என்கிற பரபரப்புடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. சீரியல் தொடங்கி மூன்று வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் 1000 எபிசோடுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து சீரியல் குழுவினருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.