இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் தான் கேப்டன். ஏலியன் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழில் வித்தியாசமான கதைகளை கொடுப்பதில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் முதலிடத்தில் இருக்கிறார். இவர் ஏற்கனவே மிருதன், டிக் டிக் டிக், டெடி போன்ற படங்களை இயக்கியிருந்தார். இதில் டெடி படத்தில் ஆர்யா நடித்திருந்தார், படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது ஆர்யாவுடன் மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்து கேப்டன் படத்தை இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இந்த படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருந்தன. இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

மூன்று நாடுகளை இணைக்கும் இந்தியாவின் ஒரு பார்டர் பகுதியில் ஒரு அடர்ந்த காடு இருக்கிறது. இந்த இடத்திற்கு பெயர் செக்டார் 42. இந்த இடத்தில் மினரல் தொழிற்சாலை ஒன்றே இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலை மூடப்பட்ட பின் 50 ஆண்டுகளாக ஆள் நடமாட்டமே இல்லாத செக்டார் 42ஐ மீண்டும் கைப்பற்ற அரசு நினைக்கிறது. அதற்காக ராணுவத்தின் உதவியை நாடுகிறது. ராணுவத்திடமிருந்து நோ அப்ஜக்ஷன் சர்டிபிகேட் வந்த பிறகு அந்த இடத்தை கைப்பற்ற அரசு திட்டமிடுகிறது. இதனால் ராணுவம் ஒரு குழுவை அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் அந்த குழு திரும்பி வரவே இல்லை. இதுபோல் அந்த இடத்திற்கு செல்லும் யாருமே திரும்பி வருவதே இல்லை. இதனால் அங்கு நடக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பதற்காக, ஆர்யா தலைமையிலான ஒரு குழுவை ராணுவம் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கிறது. ஆர்யா ஏற்கனவே ராணுவத்தில் பல சாதனைகளை புரிந்து வருவதால், இந்த அசைன்மென்ட் இவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஆர்யாவின் குழுவும் அந்த மர்மமான இடத்தை அடைந்து தனது பணிகளை தொடங்குகிறது. முன்பு இறந்தது போலவே ஆர்யாவின் குழுவில் இருந்த ஒருவரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து விடுகிறார். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு மறுபடி மீண்டும் அதே இடத்திற்கு ஆராய்ச்சியாளர் சிம்ரன் ஆர்யாவின் குழுவை அழைத்துச் செல்கிறார். அப்போதுதான் ஆர்யாவின் கண்களில் ஒரு வித்தியாசமான உருவங்கள் கண்ணில் படுகிறது. இதன்பின் ஆர்யாவின் டீமுக்கு நடந்தது என்ன? ஆர்யாவின் கண்களில் அந்த உருவம் மாட்டியது எப்படி? அதை எப்படி தனது குழுவினருடன் ஆர்யா எதிர்கொண்டார்? அதிலிருந்து மீண்டு திரும்பி ஆர்யா வருவாரா? உண்மையில் செக்டர் 42 வில் என்னதான் நடக்கிறது? என்பதுதான் கேப்டன் படத்தின் மீதி கதை. இந்தப் படம் மொத்தம் ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் இவ்வளவு நேரம் குறைவாக இருந்த போதிலும் இதன் இரண்டாம் பாகம் சற்று ஜவ்வாக இழுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

படத்தின் பாசிட்டிவ் விஷயங்களாக பார்க்கப்படுவது:
- ஆரியாவின் எதார்த்தமான நடிப்பும், அவரது கம்பீரமான தோற்றமும் ராணுவ அதிகாரியாக அவருக்கு இந்த கதாபாத்திரம் பொருந்தி போகிறது.
- கதைக்களம் மிக நன்றாக இருக்கிறது, புதிய முயற்சியாக ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.
- இமானின் இசை படத்திற்கு வலு சேர்க்கிறது.
- சிம்ரன் ஐஸ்வர்யா லட்சுமி ஹரி உத்தமன் போன்றவர்கள் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
- படத்தின் நீளம் ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் என்பது கூடுதல் ஆறுதல்.

படத்தின் நெகட்டிவ் விஷயங்களாக பார்க்கப்படுவது:
- 1987 ஆம் ஆண்டு வந்த பிரிடேட்டர் படத்தை அப்படியே காப்பி அடித்து அங்கங்கே சிறிது மாற்றங்களை செய்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த படத்தில் இருந்த சுவாரஸ்யம் சிறிது கூட இந்த படத்தில் இல்லை
- அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்கும் வண்ணமே படத்தின் திரைக்கதை இருந்தது எந்த ஒரு திருப்பமுமே இல்லாமல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது இதற்கு காரணம் மோசமான திரைக்கதை.
- படத்திற்கு தேவையே இல்லாத பல இடைச் செருகல்கள் படத்தை பின்னுக்கு தள்ளுகிறது. சிம்ரனுக்கும் பணக்கார வாரிசின் உறவுக்குமான கதையை பற்றி சொல்லும் இயக்குனர், பிரதான கதாபாத்திரமான ஏலியன் எவ்வாறு பூமிக்கு வந்தது என்பதை பற்றி சொல்லவே இல்லை. இது மிகப்பெரிய சறுக்கலாக பார்க்கப்படுகிறது.
- அனிமேஷன், VFX போன்ற தொழில்நுட்பங்கள் சிறப்பாக கையாளப்படவில்லை. ஹாலிவுட்டில் எடுக்கப்படுவது போல் அல்லாமல் தமிழில் எடுக்கப்படும் அனிமேஷன் தரம் குறைவாக இருக்கிறது என்ற முனுமுனுப்பு காதுகளில் கேட்காமல் இல்லை.

எந்த ஒரு ஆர்வத்தையோ விறுவிறுப்புமே கொடுக்காமல் ஒரு சாதாரண படமாக ஏலியன் வகை படங்களை பார்க்க தயார் என்றால் இந்த படத்தை தாராளமாக சென்று பார்க்கலாம். TamilGlitz Rating: 2/5