பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் சித்ரா, நீரில் மூழ்கி உயிரிழந்த தனது மகள் நந்தனா குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். ‘சின்னக்குயில்’ என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் பின்னணி பாடகி சித்ரா. இவர் தாய் மொழி மலையாளமாக இருந்த போதிலும் தமிழில் பல பாடல்களை பாடி தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி என்று இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி சாதனை படைத்திருக்கிறார். ஆறு முறை தேசிய விருது, ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது, பல்வேறு மாநில விருதுகள் என்று விருதுகளையும் குவித்து இருக்கிறார்.

தற்போது ‘சூப்பர் சிங்கர்’ என்கிற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும் பல படங்களில் பின்னணி பாடியும் வருகிறார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த தனது மகள் நந்தனா குறித்து அவர் இன்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். 1988ம் ஆண்டு விஜய் சங்கர் என்பவரை சித்ரா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் 2002ம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆட்டிசம் பாதித்த அந்த குழந்தையை எங்கு சென்றாலும் தன்னுடனே அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சித்ரா. கடந்த 2011ம் ஆண்டு துபாய்க்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த அவர், தனது அறையில் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது நந்தனா அறையிலிருந்து வெளியேறி அங்கு இருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி தவறி விழுந்து உயிரிழந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறந்து மகள் பிறந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் சித்ராவிற்கு இப்படி ஒரு துன்பம் நேர்ந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒவ்வொரு வருடமும் தனது மகளின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளில் உருக்கமான பதிவை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சித்ரா. அந்த நிலையில் இன்று நந்தனாவின் பிறந்த நாளை முன்னிட்டு, “என் இதயத்தை துளைத்து விட்டு சென்று விட்டாய், அதை என்னால் நிரப்பதே இயலவில்லை, நீ என்னை விட்டு சென்ற ஒவ்வொரு நாளும் உன்னை நினைத்து வாடுகிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சித்ராவிற்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்.