ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே, அதிலிருந்து ஒரு பிரபலம் விலகி விட்டதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள்தான் ஐஸ்வர்யா. இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலமாக இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். இந்த படம் எதிர்பாராத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது. சமீபத்தில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகி மீண்டும் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது இந்த திரைப்படம். அதன் பிறகு சில நாட்களாக ஆல்பம் பாடல்கள் என பிசியாக இருந்து வந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதற்கு பின்னர் அவர் தனுஷ் உடன் ஏற்பட்ட பிரிவு காரணமாக எந்த படங்களையும் இயக்குவதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் புதிய படத்திற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டு இருந்தார்.

லால் சலாம் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த படத்தின் பூஜை சென்னையில் வைத்து நடைபெற்றது. அன்றைய தினமே பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் பட பூஜையில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எட்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் பொழுது தெரிந்தது. விஷ்ணு விஷால் ,விக்ராந்த் ஆகியோர் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் எழுந்திருந்தது.
படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் படத்தின் ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா படத்திலிருந்து விலகி விட்டதாக twitter-ல் பதிவு ஒன்றை போட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே படக்குழுவினருக்கும் தமக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகவும், அதனால் லால் சலாம் படத்தில் இனிமேல் நான் பங்கெடுக்க போவதில்லை, எனவே இனி வரும் போஸ்டர்களில் என் பெயரை நீக்கி விடுங்கள் என்று சொல்லி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் லைகா ப்ரொடக்ஷனை டேக் செய்து அவர் பதிவிட்டு இருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் பூர்ணிமா இருவரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருந்து வரும் நிலையில், படம் தொடங்குவதற்கு முன்பே அவர் இவ்வாறு பதிவிட்டு இருப்பது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.