சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 170வது திரைப்படத்திற்கு ஹீரோயினாக நடிக்கும் நடிகையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. கடந்த பத்தாம் தேதி வெளியான இந்த திரைப்படம் சுமார் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து மிகப் பெரிய சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்ச்சி மிகுதியில் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் போன்றவர்களுக்கு காரையும் பரிசுத்தொகையும் வாரி வழங்கியிருந்தது. மேலும் படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு தங்க நாணயங்கள் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் கலாநிதி மாறன்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் கால்ஷீட் கொடுத்திருந்தார். தனது 170வது படத்தை இயக்க ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேலுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறார். படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று லைகா ப்ரோடக்ஷன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரங்கள் நகர்கிறது, அநீதி ஆகிய படங்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்த நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
லைகா ப்ரொடக்ஷனில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மிகவும் திறமை வாய்ந்த துஷாரா விஜயனை தலைவர் 170 படத்திற்கு வரவேற்கிறோம். துஷாரா விஜயனின் வருகையால் இந்த படம் இன்னும் வலிமை பெறும் என்று பகிர்ந்துள்ளனர். திரைத்துறைக்கு வந்து சில நாட்களிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருக்கும் துஷாராவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.