கமல் தற்போது இந்தியன் 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சங்கருக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். அதற்கு நெகிழ்ந்து போய் இயக்குனர் சங்கரும் நன்றி தெரிவித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியை இயக்குனர் சங்கர் மேற்கொண்டு வருகிறார். நடிகர் கமலஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இந்த படத்தின் சூட்டிங் விரைவில் முடிவடைய இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. முதல் படத்தைப் போலவே இரண்டாம் பாகமும் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் சேனாதிபதி என்ற கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடித்திருப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தில் ஊழலுக்கு எதிராக போராடுவது போன்று இந்த கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கமலஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஒரு படம்தான் இந்தியன். இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். சேனாதிபதி மற்றும் சந்துரு என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி அடையச் செய்திருந்தார் கமலஹாசன். ஊழலுக்கு எதிராக களம் இறங்கும் சுதந்திரப் போராட்ட வீரராக நடித்திருந்தார் கமல். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சங்கர் மற்றும் கமலஹாசன் இருவரும் விரும்பிய நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டே இதற்கான பணிகள் துவங்கப்பட்டது. பின்னர் சில தனிப்பட்ட காரணங்களால் படத்தின் படப்பிடிப்புகள் முடங்கியது. தற்போது அனைத்தும் பிரச்சனைகளும் நீங்கி, கடந்த ஆண்டிலிருந்து சூட்டிங் துவங்கப்பட்டு தற்போது இந்த படம் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. கமலஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்தியன் 2 குறித்த அப்டேட்டுகளை எதிர்பார்த்து தற்போது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், கமலஹாசன் தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், “இந்தியன் 2-வின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன், என் உளமார்ந்த வாழ்த்துக்கள் சங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என்னுடைய அவா, காரணம் இதுதான் உங்கள் கலைவாழ்வில் மிக உயரமான நிலை. இதையே உச்சமாக கொள்ளாமல் திமிரி எழுங்கள் பல உயரங்களை தேடி, உங்கள் அன்பன் கமலஹாசன்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குனர் சங்கர், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில், “எனது இதயம் முழுவதும் தற்போது மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தால் திளைத்துள்ளது. நான் எப்பொழுதும் என்னுடைய சிறந்த பங்களிப்பை தருவதை நிறுத்தப் போவதில்லை. உங்களுடைய இருப்பும், உங்களுடைய நடிப்பும் இந்த படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்த சிறந்த தருணத்திற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தை நான் கொண்டாடுகிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.