சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி வந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் ஒன்றை பரிசளித்து கௌரவப்படுத்தியுள்ளார் நடிகர் கமலஹாசன். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்த செய்தி தான் கோயம்புத்தூரை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவின் பணி நீக்கம். சில மாதங்களுக்கு முன்பு இளம் வயது பெண் ஒருவரை தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக நியமித்து இருப்பதை பாராட்டி தமிழகம் முழுவதும் செய்திகள் பரவத் தொடங்கியது. ஒரே இரவில் பிரபலமானார் ஷர்மிளா. அவரை பார்ப்பதற்கும், பாராட்டுவதற்கும், ஊக்கமளிப்பதற்கும் பிரபலங்கள் பலரும் கோயம்புத்தூருக்கு படையெடுக்கத் தொடங்கினர். அந்த வகையில் கடந்த வாரம் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது பணியில் இருந்த பெண் பயிற்சி நடத்துனர் கனிமொழியிடம் டிக்கெட் எடுக்கும்படி கண்டிப்புடன் கூற, ஷர்மிளாவுக்கும் பேருந்து நிர்வாகத்திற்கும் சண்டை ஏற்பட்டது. கனிமொழி பேருந்தில் பயணம் செய்ய இருக்கும் செய்தியை தாம் முன்னமே பேருந்து உரிமையாளரிடம் கூறிய போதும், கனிமொழி பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என மேனேஜர் தன்னிடம் கூறியதாகவும், கனிமொழி ஏற்கனவே பயணச்சீட்டு எடுத்திருந்த போதிலும் நடத்துனர் பெண்மணி மோசமாக நடந்து கொண்டதாகவும், இதனால் சோமனூர் வரை பேருந்தில் வர இருந்த கனிமொழி பாதியிலேயே இறங்கி சென்றிவிட்டதாகவும், இது குறித்து உரிமையாளரிடம் கூறும் பொழுது வாக்குவாதம் ஏற்பட்டு அந்த வேலையில் இருந்து தான் நீக்கப்பட்டு விட்டதாகவும் கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார். மேலும் டாக்ஸி அல்லது ஆட்டோ ஓட்டி பிழைத்துக் கொள்வேன் என்றும் ஷர்மிளா பேட்டியளத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று ஷர்மிளாவை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட கமல், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டூநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார் அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.
வாடகைக் கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆள வருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.