அடக்குமுறைகள், இணைய வசதிகள் இல்லாதது, பதற்றமான சூழல் போன்றவற்றால் காஷ்மீரில் சுமார் 1,44,500 பேர் வேலையிழக்க உள்ளதாக ஆய்வுகள் தெரிவிகிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. மேலும் இணைய சேவைகள் முடக்கம், தலைவர்கள் கைது, இராணுவ கண்காணிப்பு அதிகரிப்பு மற்றும் அடக்குமுறைகள் போன்றவற்றால் காஷ்மீர் திணறி வருகிறது.

குறிப்பாக இந்தாண்டு வசந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு அதிகளவு வராவிட்டால் பல லட்ச பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் காஷ்மீருக்கு 3,16,434 சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 43,059 ஆக குறைந்தது; இது 86% சரிவு என்பது, இந்தியா ஸ்பெண்ட் நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜூலை 2019 இல், காஷ்மீருக்கு 1,52,525 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். ஆனால் ஆகஸ்ட் 2019 இல் 10,130 பேர் மட்டுமே சென்றனர். அவர்களில் பெரும்பாலோர் மாதத்தின் முதல் சில நாட்களில் சென்றவர்களே. இந்த எண்ணிக்கை, 2019 செப்டம்பரில் 4,562 ஆக மேலும் குறைந்தது; எனினும், 2019 நவம்பரில் 12,086 பயணிகளாக உயர்ந்தது. இருப்பினும் 2019 டிசம்பரில் மீண்டும் 6,954 ஆக வருகை குறைந்தது.
காஷ்மீர் மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவிகிதம் பங்களிப்பு செய்வது அதன் சுற்றுலா துறையே. அப்படி இருக்கும் போது அதன் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்திருக்கிறது.
காஷ்மீர் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் (கே.சி.சி.ஐ) மதிப்பீட்டின்படி, ஆகஸ்ட் 5, 2019 முதல் காஷ்மீரின் சுற்றுலா மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் – பெரும்பாலும் பயணிகளின் வருவாயைப் பொறுத்தது- 1,44,500 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கே.சி.சி.ஐ மதிப்பீடுகளின்படி, ஆகஸ்ட் 5, 2019-க்கு பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்த வணிக இழப்புகள், 15,000 கோடி ரூபாய் (2.1 பில்லியன் டாலர்) மற்றும் மொத்த வேலை இழப்பு 4,96,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தியாஸ்பென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.