இந்த ஆண்டின் மிக பெரிய வெற்றி படம் என்றால் இந்திய அளவில் அது கன்னட திரையுலகிலிருந்து வெளியான பிரஷாந்த் நீலின் “கே.ஜி.எஃப் 2” படமே. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான “கே.ஜி.எஃப்” படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படம் நீண்ட காலமாக கொரோனா கட்டுப்பாடுகளால் தடைபட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் விஜயின் “பீஸ்ட்” படத்துடன் மோதிய இந்த படம்,ஆரம்பத்தில் கொஞ்ச சறுக்கலை சந்தித்தாலும், பீஸ்ட் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் இந்த படத்திற்கு மிக பெரிய சாதகமாக அமைந்து தமிழத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தது.

இந்திய அளவில் கிட்டத்தட்ட 800 கோடியை தாண்டி ஒட்டுமொத்தமாக உலகளவில் 1200 தாண்டி இந்திய திரை உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தட், ரவீணா தண்டொன் என பலர் நடிப்பில் வெளியான இந்த படம் ஹிந்தியில் மட்டும் 450 கோடியை வசூல் செய்து, பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலரையும் சங்கடத்தில் நிறுத்தியுள்ளது. நிறைய முன்னணி நடிகர்களே செய்யாத சாதனையை கன்னட நடிகர் யாஷ் செய்து காட்டியுள்ளார்.
கன்னட திரையுலகில் எந்த வித பின்புலமும் இன்றி, உழைப்பு ஒன்றையே வைத்துக்கொண்டு முதலில் சீரியலில் நடிக்க துவங்கிய யாஷ் பின்னர் மெதுவாக சினிமாவிற்குள் நுழைந்து சின்ன சின்ன வெற்றிகளை பெற்று வந்தார். இவர் நடிப்பில் வெளியான “கூகுலி” படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் தொடர்ந்து “ராஜா ஹுலி, Mr. & Mrs. ராமாச்சாரி, சந்து ஸ்ட்ராயிட் பர்வேர்ட்” போன்ற படங்கள் நல்ல வெற்றியாக அமைந்தது. இந்நிலையில் ஒரே படம் இயக்கிய பிரஷாந்த் நீல் இவரை “கே.ஜி.எஃப்” படத்திற்காக அணுக அடுத்த நடந்தவை நாம் அறிந்தே.
இன்று இந்திய அளவில் மிக பெரிய ஹீரோவாக உருவெடுத்துள்ள யாஷ், தன்னுடைய அடுத்த படம் குறித்து எப்போது தகவல் கூறுவார் என இந்தியாவின் பல சினிமா ரசிகர்களும் காத்துள்ளனர். இந்நிலையில் “கே.ஜி.எஃப் 2” படம் வெற்றிகரமாக 50வது நாளை கடந்ததை அடுத்த, தயாரிப்பு நிறுவனம் “ஹோம்பலே பிலிம்ஸ்” அண்மையில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் நடிகர் யாஷ் ஷாம்பைய்னே பாட்டிலை திறக்கும் வீடியோ இப்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.