ஜெர்மனியில்நடைபெற்ற லிபியா அமைதி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னாள் இராணுவ தளபதி காலிபா ஹப்தாரின் படையினருக்கும், அரசு படையினருக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

இதனால் அந்நாட்டின் அமைதி குலைந்து போய்விட்டது. வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை ஆகியவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதனையடுத்து, அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதாக ஐ.நா அழைப்பு விடுத்திருந்தது. இதற்கான மாநாடு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக உலக தலைவர்கள் பங்கேற்றனர். ரஷ்யா அதிபர் புதின், துருக்கி அதிபர் எர்டோகன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும், ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பங்கேற்கும் இந்த மாநாட்டில், காலிஃபா ஹஃப்தார் படை, சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரதமர் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசு ஆகிய இரு தரப்பையும் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பேசிய பிரதமர் ஃபாயஸ் அல்-சராஜ், “நீண்ட காலமாக நாம் பெற்றிருக்கும் அனுபவம் மறுபக்கத்தின் நோக்கங்கள், தீவிரத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை சந்தேகிக்க வைக்கிறது. எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை நிலைநாட்ட அவர்கள் துடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே” என்றார்.
லிபியாவை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு வந்த அல்-கடாஃபியின் ஆட்சியை, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியுடன் கிளர்ச்சிப் படையினரால் கடந்த 2011-ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.