நயன்தாரா ஏற்கனவே லிப் பாம் கம்பெனி ஒன்றை நடத்தி வந்த நிலையில் தற்போது புது கம்பெனி ஒன்றை துவங்கியுள்ளதாக அவரே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 75 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை படைத்து இருக்கிறார். தற்போது ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹிந்தி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார் நயன்தாரா. தற்போது கைவசம் இறைவன், டெஸ்ட் என்கிற இரு படத்திலும், மேலும் தனது 75வது படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் தனது கணவருடன் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். குடும்பம், குழந்தைகள், நடிப்பது, தயாரிப்பு என பிஸியாக இருந்து வரும் நயன்தாரா சொந்தமாக தொழில் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார். நடிகர்கள் பலரும் சம்பாதித்த பணத்தை வைத்து இரண்டாவது தொழிலை தொடங்கி நடத்தி வருவது வழக்கமாக இருக்கிறது. பலரும் ரியல் எஸ்டேட், சினிமா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம், ஹோட்டல் என தொழில்களை நடத்தி வருன்றனர். அந்த வகையில் நயன்தாராவும் உதட்டிற்கு தடவக்கூடிய லிப் பாம் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சரும மருத்துவர் ரெனிடாவுடன் இணைந்து இந்த நிறுவனத்தை கடந்த 2021ம் ஆண்டு துவங்கினார் நயன்தாரா.

தற்போது அடுத்தக்கட்டமாக அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனம் ஒன்றைத் துவங்கயுள்ளார். ‘9skin’ என பெயரிடப்பட்டுள்ள அந்த நிறுவனம் இந்த புது நிறுவனத்தை வருகிற 29ம் தேதி தொடங்க இருக்கும் செய்தியை வெளியிட்டுள்ள அவர், “ஆறு வருட அயராத முயற்சியை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். நானோ தொழில்நுட்படத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியல் நுட்பங்களுடன் கூடிய பொருட்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம்” என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் நயன்தாராவின் இந்த புது தொழிலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram