குடியுரிமைச் சட்டத்தை மட்டும் தான் ஆதரிக்கிறோம். அதேவேளையில் என்ஆர்சியை எதிர்ப்போம் என ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த மக்களும், கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற பட்டிருந்தாலும், மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லை.
தமிழகத்தின் அஇஅதிமுக, ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே மாநிலக் கட்சிகள் மீது பலத்த அதிருப்தி ஏற்பட்டது.
ஆகவே ஒடிசாவிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ” குடியுரிமைச் சட்டம் என்பது இந்தியாவோடு தொடர்புடையது அல்ல. இது வெளிநாட்டினர் தொடர்புடையது. மேலும் இந்த சட்டம் இங்குள்ள இந்தியர்களை பாதிக்காது. ஆனால் அதேவேளையில் பிஜு ஜனதா தளம் இந்திய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை கடுமையாக எதிர்க்கும். காரணம் இது மக்களை நேரடியாக பாதிக்கக் கூடியது” என தெரிவித்துள்ளார்.