பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை போட்டு வரும் நடிகர் பிரதீப் பண்டனி, “தான் பொம்பள பொறுக்கி என்று ஒத்துக் கொண்டால் கூட நிம்மதியாக இருந்து இருக்கலாம் போல” என்று சொல்லி வேதனையுடன் ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார். பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல் முறையாக ரெட் கார்ட் வாங்கி வெளியே அனுப்பப்பட்டவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. ‘அருவி’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், பின்னர் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் திரையுலகத்திற்கு வந்த இவருக்கு இன்னும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமா துறையில் வாய்ப்பு தேடி அலைபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்த ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறியவர்களும் உண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கிடைத்த கெட்ட பெயரால் தனது வாழ்க்கையை தொலைத்தவர்களும் உண்டு. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் பிரதீப் ஆண்டனி. ஆரம்பம் முதலே இவருக்கு மிகப்பெரிய மக்கள் வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் இவரின் அதீத பேச்சும், செயல்பாடுகளும் ஒரு கட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்த தொடங்கியது் குறிப்பாக கூல் சுரேஷின் தாயார் இறந்து விடுவார் என்ற ரீதியில் அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது. இது குறித்து நீதி கேட்பதற்காக வீட்டில் இருந்த மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் உரிமைக் குரல் தூக்கினர்.
பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்ற ரீதியில் பெண் போட்டியாளர்கள் கமலிடம் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதைத் தொடர்ந்து அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேறிய பின்னர் தனது காதலியுடன் கோவாவிற்கு சென்ற அவர் திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டிருக்கிறார். தீர விசாரிக்காமல் கமல் இந்த முடிவை எடுத்திருப்பதாக பிரதீப் ரசிகர்கள் மற்றும் பிக் பாஸ் ஆதரவாளர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து நடிகை வனிதா பிரதீப் ஆதரவாளரால் தான் தாக்கப்பட்டதாக எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை போட்டிருந்தார். ஆனால் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி பிரதீப் ஆண்டனி விளக்கம் அளித்து இருந்தார்.
இது மட்டுமல்லாமல் ஐஷுவின் தந்தை பிக் பாஸ் வீட்டில் தனது மகள் பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்டு காட்டியதற்காகா மன்னிப்பு கேட்கப்பட்டிருந்த ஸ்கிரீன் ஷாட்டும் வெளியாகி இருந்தது. இப்படி வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிரதீப் பற்றிய பேச்சுகள் ஓயாமல் இருந்து வருகிறது. வீட்டில் இருந்து வெளியேறி வரும் அக்ஷயா, பிராவோ போன்ற போட்டியாளர்கள் தொடர்ந்து பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து பதிவிட்டு இருக்கும் பிரதீப் ஆண்டனி, “வாரவாரம் வெளியே வரும் போட்டியாளர்களை இப்படித்தான் மன்னித்துக் கொண்டிருக்கிறேன். பேசாமல் பொம்பள பொறுக்கி என ஒத்துக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம் போல, என்னை எழுத விடுங்க ப்ளீஸ், நான் மனசுல வச்சுக்கல மன்னிச்சிட்டேன், என் பிரச்சனை என்னோடது, உங்க பிரச்சனை உங்களது” என்று சொல்லி பதிவிட்டு இருக்கிறார்.
“இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.?” என கேட்டு அவர் பதிவிட்டு இருக்கும் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Twitter Original Source From: Pradeep Antony