ரட்சிதா மகாலட்சுமி தன்னை விட்டு பிரிந்திருந்த போதிலும் அவர் பிக்பாஸில் பங்கெடுத்து இருப்பதற்கு அவரது கணவர் தினேஷ் வாழ்த்துக்களை கூறி பெருந்தன்மை காட்டி இருக்கிறார். பெங்களூருவை சேர்ந்தவர் ரட்சிதா மகாலட்சுமி. கன்னட சீரியல்களில் நடித்து வந்த அவர் விஜய்டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் சரவணன் மீனாட்சி சீசன் மூன்று மற்றும் நான்கில் மீனாட்சியாக நடித்து அசத்தியிருந்தார். ரட்சிதா பெங்களூருவில் இருந்து தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். பிறகு கணவருடன் நாச்சியார்புரம் என்ற சீரியலில் ஜீ தமிழில் இணைந்து நடித்து வந்தார். திடீரென ஒரு நாள் ரட்சிதாவும் அவரது கணவர் தினேஷும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவியது. இதை அவரது கணவர் தினேஷ் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார்.

எங்களது பிரிவு தற்காலிகமானதுதான். காலம் இதற்கான பதிலை கொடுக்கும் என்று கூறியிருந்தார். தினேஷின் இந்த பேட்டிக்கு பிறகும் ரட்சிதா மனம் மாறியதாக தெரியவில்லை. இருவரும் தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ரட்சிதாவுக்கு தொடர்ந்து அடுத்தடுத்து சறுக்கல் நடந்து வருகிறது. அவருக்கு சரியான சீரியல் வாய்ப்பு எதுவும் அமையவில்லை. விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று தானாகவே சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒரு சீரியலில் நடித்தார். பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் அவர் நடித்து வந்த சீரியல் பாதியிலேயே முடிக்கப்பட்டது. இதனால் கோபமான ரட்சிதா அந்த டிவியின் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ரட்சிதாவிற்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சீசன் 6ல் ஒரு போட்டியாளராக அவர் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கு ரட்சிதாவின் கணவர் தினேஷ் ரட்சிதாவின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் மூலமாக இன்னும் பலரின் இதயங்களை வென்று வர வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். கணவருக்கு வேலை இல்லை என்ற காரணம் காட்டி ரட்சிதா பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. அப்படி இருந்த போதிலும் ரட்சிதா பிக்பாஸில் ஜெயிக்க வேண்டும் என்று தினேஷ் முன்வந்து வாழ்த்தி உள்ளது பாராட்டுக்குரியது என்று அவரது ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். விரைவில் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் அவர்களை வாழ்த்தி உள்ளனர்.
