தற்போது மாதவனே இயக்கி, தயாரித்து நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. படம் ரிலீசிற்கு தயாராகி உள்ளது. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படம் பான் இந்தியன் வெளியீடாக தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் ISRO விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன் நடித்து இருக்கிறார். அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் தமிழ் பதிப்பில் சூர்யாவும், இந்திப் பதிப்பில் ஷாருக் கானும் நடித்திருக்கிறார்கள். பெரும் பொருட் செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தில் மாதவனின் நடிப்பு, இயக்கம், புதுவிதமாக கூறப்பட்டிருக்கும் கதைக்காணோட்டம் என அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த மாதம் வெளியான நடிகர் கமலின் “விக்ரம்” படத்தில் கமல், விஜய் சேதுபதி, பாஹத் பாசில் என மூவருமே நடிப்பில் மிரட்டி எடுத்திருந்தாலும், கடைசி 5 நிமிடங்களில் வந்து மொத்த திரையரங்களையும் அலற விட்டவர் நடிகர் சூர்யா. அதே போலவே இந்த படத்திலும் கிட்டத்தட்ட வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வரும் சூர்யா இதிலும் மிரட்டி உள்ளார்.

படம் தமிழை போலவே ஹிந்தியிலும் மிக பெரிய வகையில் வரவேற்கப்பட்டு வருகிறது. இது மாதவனின் கனவு வேலையாகவே பார்க்கப்பட்டது. படம் ஓட ஓட வயதாகவும் மாதவன் அதனை நம் கண்முன் நிறுத்த மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


நமக்கு தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும் நிறைய நிஜ ஹீரோக்களில் ஒருவரான திரு. நம்பி நாராயணனின் கதையை எந்த வித சமரசங்களும் இன்றி மிக சிறப்பாக படமாக்கி அதில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மாதவன் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

