‘திரௌபதி’, ‘மண்டேலா’, ‘கும்பலங்கி நைட்ஸ்’ போன்ற படங்களில் நடித்த நடிகை ஷீலா ராஜ்குமார் தனது கணவரை பிரிந்து விட்டதாக சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஷீலா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞரும் ஆவார். சென்னையைச் சேர்ந்த கூத்து பட்டறையில் தியேட்டர் கலைஞராக பணியாற்ற தொடங்கிய அவர் பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாளைய இயக்குனர்’ என்ற நிகழ்ச்சியில் குறும்படங்களில் நடித்து பிரபலமானார்.

பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2016ம் ஆண்டு வெளியான ‘ஆறாது சினம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமாக கவனிக்கப்பட்ட அவருக்கு, அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ‘டூலெட்’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் தேசிய விருதையும் பெற்றிருந்தது. அதன் பின்னர் மலையாள படமான ‘கும்பலங்கி நைட்ஸ்’ படத்திலும் குறிப்பிடத் தகுந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நம்ம வீட்டு பிள்ளை, திரவுபதி, மண்டேலா, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எல் போன்ற பல படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘அழகிய தமிழ் மகள்’ சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் இவர் நடித்த ‘திரௌபதி’ திரைப்படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி இந்த படம் வெளியானதாக எதிர்ப்புகள் கிளம்பியது. படம் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பின்னர் பேட்டி அளித்திருந்த ஷீலா, “திரௌபதி படத்தில் நடித்ததை நான் கெட்ட கனவாக நினைக்கிறேன். முழு கதையையும் சொல்லாமலேயே என்னை நடிக்க வைத்து விட்டனர், நான் ஜாதி பார்த்து ஒருபோதும் பழகியதில்லை, நான் தடுக்கி விழுந்து விட்டேன், அந்த காயத்திற்கு மருந்து போட்டு விட்டு அடுத்த நல்ல விஷயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்” என்று கூறி அதிர வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், “திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன் நன்றியும் அன்பும்” என்று சொல்லி தனது கணவரை டேக் செய்து பதிவிட்டுள்ளார். ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த தம்பி சோழர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஷீலா. இவரது குறும்படத்தில் நடித்த கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் இவர்கள் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2014ம் ஆண்டு கடலுக்கு நடுவில் வைத்து வித்தியாசமான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது தம்பி சோழரை பிரிந்து விட்டதாக ஷீலா ராஜ்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.