குடியுரிமை மசோதாவை திருத்தி அமைக்கவிட்டால் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்கமாட்டோம் என மகாராஷ்டிரா முதல்வரும், சிவ சேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தேசிய குடியுரிமை மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதத்திற்கு பின் பெரும்பான்மையினரின் ஆதரவை பெற்று நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மசோதா மாநிலங்களவையில் ஒப்புதலுக்காக நாளை தாக்கல் செய்யப்படும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, “மசோதாவில் உள்ள குளறுபடிகளை திருத்தாவிட்டால், மாநிலங்களவையில் ஆதரவு தரமாட்டோம்” என்றார். மேலும் கூறுகையில், “இந்த மசோதா மீது நிறைய ஆலோசனைகளும், நீண்ட விவாதங்களும் தேவைப்படுகிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்வதை விட, வெங்காய விலை உயர்வு, வேலைவாய்ப்பு இன்மை, பொருளாதார நெருக்கடி மற்றும் உயரும் வாழ்க்கையின் பயன்பட்டு செலவு ஆகியவற்றை பற்றி மோடி அரசு சிந்திக்க வேண்டும். அதே போல், இந்த மசோதாவையும், பாஜகவையும் எதிர்ப்போர் தேச விரோதி என்ற கருத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும். இந்த மசோதா மீது எழுப்பப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளித்தாக வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு 119 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. அதே வேளையில், காங்கிரசுக்கு 67 உறுப்பினர்களும், மூன்றாம் அணிக்கு 59 உறுப்பினர்கள் என அங்கம் வகிக்கிறார்கள். இதனால் பாஜகவிற்கு ஆதரவு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மாநில கட்சிகள் ஒன்று கூடினால் மாசோதா வெற்றியோ அல்லது தோல்வியோ எதற்கு வேண்டுமானாலும் வாய்ப்பு இருக்கிறது.