ஜெய் பீம் படம் குறித்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் வெளியான படம் தான் ஜெய் பீம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சமூக அக்கறையுடன் கூடிய படங்களில் நடிப்பது, படங்கள் எடுப்பது அல்லது படங்களை வாங்கி விநியோகஸ்தம் செய்வது என்று நடிகர் சூர்யா சில நல்ல முன்னெடுப்புகளை செய்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த சூரரைப் போற்று, எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் போன்ற படங்களில் சமூக அக்கறை உள்ள சிந்தனைகளை வெளிப்படுத்தினார். இதில் ஜெய் பீம் படம் இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், முன்பு ஒரு காலத்தில் எவ்வாறு துன்புறுத்தப்பட்டனர் என்பது குறித்த படமாகும். இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து மணிகண்டன் நிஜாமுல் ஜோஸ், ரெடிஷா போன்றவர்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெளியான போது சில சர்ச்சைகளும் ஏற்பட்டது. அதில் விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை துன்புறுத்தி மூன்று போலீஸ்காரர்கள் கொன்று விடுவார்கள். அதற்கு நீதி கேட்டு போராடும் பழங்குடியின பெண்ணிற்கு ஆதரவாக வழக்கறிஞராக சூர்யா நடித்திருப்பார். இது உண்மையில் நடந்த கதையை அடிப்படையாகக் கொண்ட படமாகும். சூர்யா கதாபாத்திரம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பதாகும். படம் வெளியான போது காவலர்கள் சில சமுதாயத்தை சேர்ந்தவர்களாக காண்பிக்கப்பட்டது எனவும், காலண்டரில் சில சமுதாயத்தைச் சேர்ந்த குறியீடுகள் இருந்ததாகவும், சூர்யா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்தன. பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், மற்றும் அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் கூட கடுமையாக அறிக்கைகள் வெளியிட்டிருந்தனர்.

ஒரு படி மேலே போய் ரயில்களில் கற்களை வீசி போராட்டம் நடத்தினர். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யா தரப்பிலும் இயக்குனர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. தாங்கள் எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கில் அவ்வாறு செய்யவில்லை என்று அவர்கள் விளக்கம் அளித்திருந்தனர். என்றாலும் சூர்யா மீது வன்மம் குறையாமல் இருந்து வந்த சிலர் நீதிமன்றங்களை நாடி சூர்யா மீது வழக்குகள் தொடுத்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணைக்கு வலுவதற்கு முன்பே காலண்டர் காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் எதுவும் அமைக்கப்படவில்லை என்றும், வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.