தேசிய குடியுரிமை மசோதா தமிழர்களுக்கு எதிராக இருப்பது ஏன் என தமிழ்நாட்டின் எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவின் சமகால அரசியலில் மிக பெரிய விவாதமாக தேசிய குடியுரிமை மசோதா மாறி இருக்கிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இம்மசோதாவை மக்களவையில் நேற்று அறிமுகப்படுத்தினார்.

இது குறித்தான விவாதத்தில், “கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக இருந்து வருகிறார்கள். ஆதாலால் இப்படியான வக்கற்ற மசோதாவை திருத்த வேண்டும்” என திமுக எம்.பியான டி.ஆர்.பாலு குரல் கொடுத்தார்.
அதே போல, இது குறித்து பேசிய விசிக கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் “சிறுபான்மை சமூகத்தின் உரிமையை பாதுகாக்கும் போது தான் பெரும்பான்மை சமூகத்தின் தன்மை அடங்கிருக்கிறது, ஜனநாயகம் அடங்கிருக்கிறது என்று புரட்சியாளர் அம்பேதகர் கூறியிருக்கிறார். அதேபோல் பெரும்பான்மை என்ற பெயரில் விருப்பம் போல் ஆடுவது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருப்பது ஜனநாயகதிற்கு புறம்பானது மட்டுமல்ல பாசிச போக்காகும். ஒரு குறிப்பிட பிரிவினரை மட்டும் விலக்கி வைக்கிறார்கள். அடைக்கலம் தேடி வந்தவர்களை அரவணைப்பது தான் மனித நாகரீகத்தின் உச்சமாகும், மனிதநேயமாகும். அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை, நேபால், மியான்மர் போன்றவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
அதே போல், கருத்து தெரிவித்த விசிக எம்.பி ரவிக்குமார், “இனத்தால் தமிழர்களும், மதத்தால் இஸ்லாமியர்களும் ஒடுக்கப்பட்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் திமுகவின் மற்றோரு எம்.பியான தயாநிதி மாறன் பேசும் போது, “இலங்கை தமிழர்களை பற்றி ஏன் குறிப்பிடவில்லை? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய பகுதி தானே! அப்படியேயானால் அவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படுமா? இந்த மசோதா மத வெறுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், வடநாட்டிற்கான அமைச்சர் போல நடந்துகொள்கிறார். அவர் இந்தியா முழுமைக்கான அமைச்சர்” என தெரிவித்தார்.