One Liner: திருச்சிற்றம்பலம் – மிடிஸ் கிளாஸ் பையனின் கதை Tamilglitz Rating 2.5/5

தனுஷின் 44-வது படமாக வெளிவந்துள்ளது திருச்சிற்றம்பலம். கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷுடைய படங்கள் அனைத்துமே ஓடிடி தளத்தில் வெளியானதால், இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த படம் திரையில் வெளியாகி இருக்கிறது. எனவே இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர், ப்ரோமோக்கள் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்து உள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அனிருத்தும் தனுஷும் இணைந்துள்ளதால் பாடல்கள் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை பார்க்கலாம்.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் தனது தந்தை பிரகாஷ்ராஜ் செய்யும் ஒரு சிறு தவறால், தனது தாய் மற்றும் தந்தையை இழந்து விடுகிறார் தனுஷ். இதனால் சிறு வயது முதலே பயந்த சுபாவமாக வளரும் தனுஷ், தனது தாத்தா அரவணைப்பிலேயே வளர்ந்து வருகிறார். தனுஷுடைய வாழ்க்கையில் முக்கிய அங்கமாக அவருடைய சிறு வயது தோழியாக இருக்கும் பக்கத்து வீட்டு பெண்ணான நித்யா மேனன் இருக்கிறார். கல்லூரி படிப்பை படித்து முடித்த பின்பு பெரிய அளவில் வேலை எதுவும் கிடைக்காததால் உணவு விநியோகம் செய்யும் டெலிவரி பாய் வேலையை பார்த்து வருகிறார் தனுஷ். அப்போது அவரின் பள்ளிப் பருவ தோழியை சந்திக்கிறார். அந்த தோழியுடன் அவருக்கு காதல் வயப்படவே இருவரும் காதலிக்கின்றனர். ஆனால் அந்தக் காதல் இறுதியில் முறிவிலேயே முடிகிறது. இந்த காதல் தோல்வியால் மிகவும் விரக்தியில் இருக்கிறார் தனுஷ். இவர் இவ்வாறு விரக்தியில் இருக்கும் நேரங்களில் மிக ஆறுதலாக நித்யா மேனன் இருக்கிறார்.

நண்பனுக்காக எந்த தியாகத்தையும் செய்யும் நித்யா மேனன் கதாபாத்திரம், மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் தனது தாத்தாவுடன் சேர்ந்து கொண்டு குடித்துவிட்டு கும்மாளம் போடும் பாரதிராஜா – தனுஷ் காம்போ வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. காதல் தோல்வியால் தனுஷுக்கும் பிரகாஷ்ராஜுக்கும் சண்டை ஏற்பட, அதனால் பிரகாஷ் ராஜுக்கு மிகுந்த உடல் நலிவு ஏற்படுகிறது. உடல்நலம் குன்றிய தன் தந்தையை தனுஷ் எவ்வாறு பார்த்துக் கொள்கிறார். பிரியா பவானி ஷங்கருடன் தனது காதல் கை கூடுகிறதா இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை. யாரடி நீ மோகினி, விஐபி படங்களுக்குப் பிறகு பழைய தனுஷை நம்மால் பார்க்க முடிகிறது. ஆக்ஷன் காட்சிகள் என்று இல்லாமல் காமெடி கலந்த ஒரு நூறு சதவீதம் காதல் கதையை கொடுத்திருக்கிறார் மித்ரன் ஜவகர். அந்தப் பழைய எனர்ஜி, நகைச்சுவை உணர்வு என்று தன்னுடைய அசாத்திய நடிப்பால் மிரட்டி இருக்கிறார் நடிகர் தனுஷ்.

படத்தின் பாசிட்டிவ் விஷயங்களாக பார்க்கப்படுவது, தனுஷின் நடிப்பு. தாத்தாவுடன் சேர்ந்து தனுஷ் செய்யும் குறும்புகள், பாரதிராஜா உடன் இணைந்து தண்ணி அடித்துக் கொண்டு தனுஷ் செய்யும் காமெடி கலாட்டாக்கள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதே நேரத்தில் தனது உடல் நிலை சரியில்லாத தனது தந்தைக்ககாவும், குடும்பத்திற்காகவும் தனுஷ் படும் கஷ்டங்களும் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. காவல் துறை அதிகாரியான பிரகாஷ் ராஜ், மகன் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் தந்தையாக பாசம் காட்டும் காட்சிகளில் நம்மை உருக வைத்து இருப்பார். தந்தை மகன் காட்சிகளை அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஜவகர். ஒரு உற்ற தோழியாக படத்தில் கடைசி வரைக்கும் வருகிறார் நித்யா மேனன் படத்திற்கு இவர் ஒரு தூணாக இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. படத்தின் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் வந்தபோதிலும் தங்களுடைய பங்களிப்பை அவர்கள் அழகாக அளித்திருக்கின்றனர். படத்திற்கு கூடுதல் வலுவாக அனிருத் இசை இருக்கிறது. டிஎன்ஏ காம்போ என்றால் கேட்கவா வேண்டும்?

படத்தின் குறைகளாக பார்க்கப்படுவது முதல் பாதியில் இருக்கும் சுவாரஸ்யம், இரண்டாம் பாதியில் இல்லை. முதல் பாதி 90ஸ் கிட்ஸை கவரும் விதமாக இருந்த போதிலும், இரண்டாவது பாதி சற்று மெதுவாக தான் சொல்கிறது. ஏற்கனவே தனது படங்களில் எடுக்கப்பட்ட காட்சிகளையே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்து அரைத்த மாவையே அரைத்து இருப்பதாக சிலர் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் சில லாஜிக் குறைபாடுகளும் இருக்கவே செய்கிறது. கையில் காசு இல்லாமல் உணவு டெலிவரி செய்து வரும் இளைஞ,ர் நாயகி வெளிநாடு சென்றவுடன் பின்னாலேயே செல்வது நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது. படத்தில் அதிகப்படியான காமெடி காட்சிகள் இல்லாததால் சிறிது ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. குறைகளை பொறுத்துக் கொண்டு படம் பார்த்தால் திருச்சிற்றம்பலம் ஒரு தடவை பார்க்கக்கூடிய படமாக தான் இருக்கிறது.
